பழைய திமுகவினராக இருந்தால்.. எனக்கே சிஎம் வாய்ப்பூட்டு போட்டுட்டாரு- பாஜகவுக்கு வேல்முருகன் வார்னிங்
கோவை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் பழைய திமுகவினராக இருந்தால் பாஜகவினர் வால் நறுக்கப்பட்டிருக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேமுருகன் எம்.எல்.ஏ. காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் கண்டனப் பொதுக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் எம்.எல். ஏபேசியதாவது: பாசிச பாஜக இந்துத்துவ கும்பல்களின் இடுப்பு எலும்பை முறிக்கும் வகையில் திமுகவினர் இங்கே கூடியுள்ளனர். சங் பரிவார கும்பலை ஒடுக்க, தமிழ்நாட்டில் கத்திக் கொண்டிருக்கும் கத்துகுட்டி (ஆளுநர்) ஒன்றின் குரலை அடக்கவும் கொங்குநாடே திரண்டு வந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவரது சகோதரரையும் விசாரணைக்கு அழைத்திருக்கிறது அமலாக்கத்துறை. இப்படியான சர்வாதிகாரப் போக்குடன் மத்திய பாஜக அரசு நடந்து கொள்கிறது. மத்திய பாஜக அரசின் கைக்கூலிகளாக இருக்கும் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை கண்டிக்கிறோம்.

என் மீதான வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்த பின்னரும் 18 மணிநேரம் இயற்கை உபாதைக்கு அனுமதிக்காமல், உடை மாற்ற அனுமதிக்காமல், உணவு அருந்த வாய்ப்பளிக்காமல் சர்வாதிகாரத்திமிரோடு அடக்கு முறையை ஏவுகிறீர்கள். மத்தியில் ஆண்ட அரசுகளின் அடக்குமுறைகளை எதிர்த்து திமிறி எழுந்த மண் தமிழ்நாடு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மிசா கொடுஞ்சிறையை சந்தித்தவர்கள் திமுகவினர்; பொடா, தடா சட்டங்களை சந்தித்தவர்கள் வைகோ போன்றவர்கள். ஒடுக்குமுறைக்கு எதிராக களமாடிய இயக்கம் இடதுசாரிகள். உங்கள் ராணுவத்தையே சந்தித்த இயக்கங்களின் பிரதிநிதிகள் இங்கே இருக்கிறோம். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அனுமதி பெறாமல் எவ்வளவு திமிர் இருந்தால் தமிழ்நாடு தலைமை செயலகத்துக்குள் நுழைந்து சோதனை நடத்துவீர்கள்?

2024 தேர்தலில் தமிழ்நாடு பாஜகவை மிதிக்க போகிறது; அமித்ஷா வந்தாராம்.. அண்ணாமலை சொன்னாராம்.. மறுநாளே செந்தில் பாலாஜியை கைது செய்தார்களாம். ரொம்ப துள்ளுகிறீர்கள்.. ரொம்ப வாய் துடுக்காக பேசுகிறீர்கள். திமுகவுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு என ஒரு பொதுப்புத்தி இருக்கிறது. இதே பழைய திமுககாரனாக இருந்தால் இப்படி எல்லாம் பேச முடியுமா? எங்க அண்ணன் டி.ஆர்.பாலு, ஆ.ராசா போன்றவர்கள் ரொம்ப மிதவாதிகளாகிவிட்டார்கள். முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கும் வாய்ப்பூட்டு போட்டுவிட்டார். திமுக என்பது மாநில சுயாட்சி கேட்டது. தந்தை பெரியாரும் தி.க.வும் தமிழ்நாடு தமிழருக்கே என முழக்கமிட்ட இயக்கம். நீங்கள் அதிகாரத்திமிருடன் ஆடினால் உங்கள் வால்கள் ஒட்ட நறுக்கப்படும். இவ்வாறு வேல்முருகன் பேசினார்.













Click it and Unblock the Notifications