செந்தில் பாலாஜிக்கு குடைச்சல்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு.. வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன்
கோவை: செந்தில் பாலாஜிக்கு நிறையபேர் இடையூறு அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு, முழுமையாக அதுகுறித்து கட்சி விழாவில் முதல்வர் பேசட்டும் நான் பதில் அளிக்கிறேன் என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில், பங்கேற்ற கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானிதி சீனிவாசன், நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல்வரை நேரில் சந்தித்து மனு வழங்கினார். அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர் வானதி சீனிவாசனுடன் சிறிது நேரம் அவரது கோரிக்கைகளை நேரடியாக கேட்டுவிட்டு சென்றார்.

அதைத்தொடர்ந்து, வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கோவை மாவட்டத்துக்கு நிறைய அறிவிப்புகளை முதல்வர் கொடுத்து இருக்கின்றார். சின்னியம்பாளைம் முதல் நீலாம்பூர் வரை பாலத்தை நீடிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அது தொடர்பான அறிவிப்பை முதல்வர் கொடுத்து இருக்கிறார்.
கோவையில் தங்க நகை பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். அது தொடர்பான அறிவிப்பையும் முதல்வர் இங்கே கொடுத்திருக்கிறார். முதல்வரிடம் விஸ்வர்மா யோஜானா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இருக்கின்றேன்.
கோவையில பாதாள சாக்கடை, குப்பை இல்லாத கோவை, ஸ்மார்ட்சிட்டி குளங்கள் பராமரிப்பு ஆகியவை குறித்தும் மனுவில் தெரிவித்து இருக்கின்றேன். மெட்ரோ ரயில் திட்டம் குறித்த கோரிக்கை முதல் கோரிக்கையாக மனுவில் இருக்கின்றது. மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பல்வேறு ஆவணம் மாநில அரசு சார்பில் மத்திய அரசிடம் கொடுக்காமல் இருக்கின்றது. அதனை அவரது கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றேன்.
கோவை விமான நிலைய விரவாக்கத்திற்கு நிலம் ஒப்படைத்து விட்டதாகச் சொன்னார். ஆனால், இன்னும் சில பகுதிகளில் ஒரு சிலர் இருப்பது குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடயாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கின்றார். அதனால்தான் 95 சதவீத பணிகள் மட்டும் விமான நிலைய விவகாரத்தில் முடிந்து இருக்கின்றது என முதல்வர் சொல்லி இருக்கின்றார்.
கோவையில் சாலை பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கின்றனர். இந்த 200 கோடியாவது தரமான முறையில் சாலைகள் அமைக்க செலவிடப்பட வேண்டும். கோவை தெற்குத் தொகுதியில் பல இடங்களில் பட்டா கிடைக்காமல் இருக்கின்றனர். கோவை வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான திட்டங்கள் தேவை.
தெற்கால்தான் தற்பொழுது வடக்கு வாழ்கிறது என முதல்வர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, ஒரு குடும்பத்தில் வளர்ச்சி என்பதுதான் முக்கியம், முதல்வர் பிரிவினை வாதம் பேசாமல், மக்களை திசை திருப்பாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். கோவையில் தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் ஆகியோர் முகாமிட்டுப் பணிகளை மேற்கொண்டு இருப்பதை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் வரவேற்கின்றேன்.
இதேபோல, அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அரசுத் துறையில் லஞ்சம் அதிகமாக இருக்கின்றது. கோவையை கவர முதல்வர் முயற்சி செய்கின்றார். கோவையை கவர்ந்து விட்டாரா என்பது 2026 தேர்தலில் தெரியும்.
செந்தில் பாலாஜிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக முதல்வர் கூறிய கேள்விக்கு, அரசு விழா என்பதால் முழுமையாக பேச முடியவில்லை என ஸ்டாலின் கூறிவிட்டார். அவர் அதுகுறித்து முழுமையாக கட்சி விழாவில் பேசட்டும் அதற்கு நான் என் பதிலைக் கூறுகிறேன் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications