தலைக்கு வந்த ஆபத்து தலைபாகையோடு போனது.. குலதெய்வம் கோயிலுக்கு மகனுடன் சென்ற வானதி.. போட்டோஸ் வைரல்
கோவை: கோவை வெள்ளகிணறு பத்ரகாளியம்மன் கோயிலில் மூத்த மகன் ஆதர்ஷுடன் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் குலதெய்வ வழிபாடு நடத்தினார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
பாஜக மகளிர் அணி செயலாளராக உள்ளவர் வானதி ஸ்ரீனிவாசன். இவர் அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன் கடுமையாக போட்டியிட்டு வென்றுள்ளார்.
கொரோனா வைரஸை ஒழிக்க பொது இடங்களில் நீராவி பிடிக்கும் நடைமுறையை அவரது தொகுதியில் செயல்படுத்தினார். சமூக அவலங்களுக்கு குரல் கொடுப்பவர். ஆனால் இவரது கட்சியினர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை இவர் கண்டிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

மசோதா
இந்த நிலையில் நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டசபையில் திமுக கொண்டு வந்தது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அது போல் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் மத்திய மருத்துவ பல்கலைக்கழகங்களான எய்ம்ஸ், ஜிப்மர் ஆகியவற்றில் இடம்பெறலாம். நீட் தேர்வை முதலில் கொண்டு வந்தது யாரு என வானதி ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

கண்டனம் தெரிவித்த நெட்டிசன்கள்
இதற்கு ஏராளமானோர் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். நீட் தேர்வை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்ததாகவே இருந்தாலும் அவர்கள் எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்தவில்லை, நீட் வேண்டுமா வேண்டாமா என ஆப்ஷன்களை கொடுத்திருந்தனர். பாஜகவை போல் அவர்கள் திணிக்கவில்லை என பதிலடி கொடுத்திருந்தார்கள்.

மூத்த மகன்
இந்த சர்ச்சைகள் ஒரு புறமிருக்க, வானதியின் மூத்த மகன் ஆதர்ஷ் சென்ற கார் சேலம் பட்டர் பிளை மேம்பாலத்தில் சென்ற போது கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் சிறிது தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டிருந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக ஆதர்ஷ் உயிர் தப்பினார். இதையடுத்து தனது மகன் சந்தித்த விபத்து குறித்து அன்போடும் அக்கறையோடும் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என வானதி பதிவிட்டிருந்தார்.

குலதெய்வம்
கார் தலைக்குப்புற கவிழ்ந்து சிறிது தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டும் தெய்வாதீனமாக தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையுடன் போனதை அடுத்து தெய்வங்களுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்த வானதி நேற்றைய தினம் குலதெய்வம் கோயிலுக்கு ஆதர்ஷுடன் சென்று வழிபாடு நடத்தினார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் ஷேர் செய்துள்ளார்.

வானதி ட்விட்டர்
இதுதொடர்பாக வானதி வெளியிட்ட ட்வீட்டில் மூத்தமகன் ஆதர்ஷ் உடன் குலதெய்வம் கோவை வெள்ளகிணறு பத்ரகாளியம்மன் கோயிலில் தரிசனமும், குடும்ப பெரியவர்களிடம் ஆசியும் பெற்றோம். அன்னை பராசக்தி அருள் அனைவரையும் காக்கட்டும் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications