இத்தனை ஆண்டா அரசியல்ல இருக்கீங்க.. ஒரே இடத்துலதான் ஜெயிச்சீங்க.. ஆனால் நாங்கள்.. விஜய் ரசிகர்கள்!
கோவை: கோவையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து விஜய் ரசிகர் மன்றத்தினர் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
Recommended Video
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நடிகர் விஜய்யையும் விமர்சித்து பேசியிருந்தார்.
இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அப்போது மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி தலைமை ஒரு ஸ்டிக்கரை விஜய் ரசிகர்கள் ஒட்டியிருந்தனர்.
விமர்சனம்
அதில் தமிழனாய் பிறந்து தமிழனையே விமர்சனம் செய்ய உனக்கு என்ன தகுதி இருக்கு தளபதியை குறை கூறுவதற்கு ஜில் ஜங் ஜக் சீமானே மன்னிப்பு கேள் என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அது போல் தேனியிலும் சீமானை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
விஜய் அரசியலுக்கு வரட்டும்
விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது என சீமான் வருத்தம் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையில் விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது. குறைந்தது சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும். மக்களுக்காக போராடி தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும் என்றார் சீமான்.
10 ஆண்டுகள்
இந்த நிலையில் சீமானை கண்டிக்கும் விதமாக கோவை நகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களில் 10 ஆண்டுகளாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார் சீமான்.
விஜய் ரசிகர்கள்
உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில்தான் வெற்றி பெற முடிந்தது. ஆனால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று இருப்பதாக அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு சீமான் என்ன சொல்ல போகிறார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.