தோஸ்த் படா தோஸ்த்.. இந்து, முஸ்லீம் இணைந்து கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி..களைகட்டிய கோவை, பொள்ளாச்சி
கோவை: கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் இஸ்லாமியர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து, சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அதேபோல, கோவையில் உள்ள ஆசியாவின் 2வது உயரமான விநாயகர் சிலை உள்ள புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை வழிபட்டுச் சென்றனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகரின் பிறந்தநாளாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று காலை முதலே விநாயகர் சதுர்த்தி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டிரம்ஸ் வாசிக்கும் விநாயகர், ஸ்விம்மிங் செய்யும் விநாயகர், 5 நிமிடத்தில் களிமண்ணால் செய்யப்படும் விநாயகர், பிரம்மாணட் நந்தி வாகனத்தில் இருக்கும் விநாயகர், பால விநாயகர் என பல்வேறு வண்ணங்களில், பல்வேறு தீம்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஊரெல்லாம் பந்தல்கள் அமைத்து மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சிலைகள் மூன்றாவது அல்லது 5வது நாள்களில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. இந்து அமைப்புகள் சார்பில் பிரம்மாண்ட சிலைகள் தமிழ்நாடு முழுவதும் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
கோவை மாவட்டம், புலியகுளத்தில் தான் ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான விநாயகர் சிலை உள்ளது. பிரசித்தி பெற்ற புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது. இங்குள்ள விநாயகர் சிலை 19 அடி உயரமும் பத்து அடி அகலமும் கொண்ட சிலையாகும்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 50 கிலோ சந்தனக் காப்பும், இரண்டு டன் மலர்களாலும் ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதலே விநாயகருக்கு 16 வகையான வாசனை திரவியங்கள் அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து விநாயகரை வழிபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்காக அன்னதானமும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மிகவும் பிரபலமான பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் நடத்தும் ஏழாம் ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. இதில், அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் கோவிலுக்கு வந்து விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டு சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அதைத்தொடர்ந்து, மாட்டுச் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபாடு செய்தனர். மேலும், சகோதரத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக இஸ்லாமியர் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். செப்டம்பர் 11 ஆம் தேதி இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் என 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications