பொள்ளாச்சி சம்பவம்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு ஸ்டேட்மென்ட் இதுதான்!
கோவை: பொள்ளாச்சியில் பாலியல் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு புகார் தற்போது வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்து 19 வயது கல்லூரி மாணவி புகார் கொடுத்தார். இதையடுத்து சபரிராஜன் (எ) ரிஸ்வந்த், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் அந்த மாணவி புகாரில் கூறியிருக்கையில், பொள்ளாச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறேன். எனது பள்ளித் தோழி அறிமுகம் செய்து வைத்ததன் மூலம் மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் மகன் திருநாவுக்கரசுவையும், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகேஸ்வரன் மகன் சபரிராஜன் (எ) ரிஷ்வந்தையும் எனக்கு தெரியும்.

பஸ் நிலையத்துக்கு அழைத்த இருவர்
அவர்கள் இருவரும் என்னுடன் போனில் பேசுவார்கள். அண்ணன் வயதில் இருப்பதால் இருவரிடமும் நானும் நட்பு ரீதியில் பழகினேன். இந்நிலையில் கடந்த மாதம் 12-ஆம் தேதி நான் கல்லூரியில் இருந்த போது சபரிராஜன் எனக்கு போன் செய்து உன்னிடம் தனியாக பேச வேண்டும். உடனே புறப்பட்டு ஊஞ்சவேலாம்பட்டி பஸ் நிலையத்துக்கு வா என்றார்.

பேக்கரி முன் நின்றிருந்த கார்
நான் கல்லூரியில் இருந்து வெளியே வந்து பஸ் ஏறி ஊஞ்சவேலாம்பட்டி பஸ் நிறுத்தத்துக்கு சென்றேன். அங்கு ஒரு பேக்கரி முன் காரை நிறுத்திக் கொண்டு சபரியும் திருநாவுக்கரசும் இருந்தனர். அப்போது வா காரில் போய் கொண்டே பேசலாம் என கூறினர். இதையடுத்து நான் காரில் பின் சீட்டில் ஏறினேன். என்னுடன் சபரிராஜன் உட்கார்ந்தார்.

யார் இவர்கள்
காரை திருநாவுக்கரசு ஆன் செய்ததும் காரில் மேலும் இருவர் ஏறிக் கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் யார் என சபரியிடம் கேட்டபோது கடை வீதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் சதீஷ் எனவும், பின் சீட்டில் இருந்தவர் பக்கோதிபாளையம் வசந்தகுமார் எனவும் தெரிவித்தார்.

முன் சீட்டில்
இதையடுத்து கார் சிறிது தூரம் சென்றவுடன் ஏதோ பேச வேண்டும் என்றாயே என்ன பேச வேண்டும் என கேட்டேன். உடனே திருநாவுக்கரசு தாராபுரம் சாலையில் சிறிது தூரம் சென்றுவிட்டு காரை நிறுத்தினார். அப்போது எனது விருப்பம் இல்லாமல் சபரிராஜன் எனது மேலாடையை கழற்றினார். நான் தடுப்பதற்குள் முன் சீட்டில் இருந்த சதீஷ் வீடியோ எடுத்தான்.

செயின் பறிப்பு
இதனையடுத்து நான் மேலாடை இல்லாத கோலத்தில் வீடியோ எடுத்து என்னை மிரட்டினர். என்னிடம் பணம் கேட்டனர். பணம் இல்லை என்றதற்கு கழுத்தில் இருந்து தங்க செயினை கேட்டனர். நான் மறுத்ததால் மற்ற மூவரும் என் கைகளை பிடித்துக் கொள்ள சதீஷ் எனது கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டான்.

புகார்
பின்னர் என்னை காரில் இருந்து இறக்கி விட்டனர். நான் அழுவதை பார்த்த இருவர் என்னை ஒரு ஆட்டோவில் ஏற்றி விட்டனர். கல்லூரிக்கு வந்து அங்கிருந்து வீட்டுக்கு வந்த நான் இதை பெற்றோரிடம் சொல்லவில்லை. ஆனால் இந்த 4 பேரும் என்னை போன் செய்து பணம் கேட்டு மிரட்டினர். அதனால் 24-ஆம் தேதி எனது குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தை சொல்லிவிட்டேன். இதன் பிறகுதான் புகார் கொடுக்கப்பட்டது என்றார் அந்த பெண்.












Click it and Unblock the Notifications