பெரும்பான்மைக்கு என்ன செய்ய போகிறது தவெக.. செங்கோட்டையன் நச் பதில்!
கோவை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தவெக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகள் தவெகவுக்கு கிடைக்காததால் தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது. பெரும்பான்மை பெறுவதற்கு தவெக என்ன செய்ய போகிறது என்கிற கேள்விக்கு செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக தலைவர் தளபதி மீது மக்கள் வைத்துள்ள அன்பும், ஆதரவும் தான் வெற்றிக்கு காரணம். ஒரு இயக்கம் வளர வேண்டும் என்றால் தியாகம் செய்ய வேண்டும். தியாகத்தின் அடிப்படையில் தான் ஒரு நிறுவனம் இருக்கும்.

தொலைநோக்கு பார்வை
பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மா ஆகியோர் தியாகத்தால் வளர்ந்தவர்கள். அந்த இயக்கங்கள் தியாகத்தால் வளந்தவை. ஆகவே அவை நிலைத்து நின்றன. இப்போது அது தடுமாறிக் கொண்டிருக்கிறது. எங்களை பொறுத்தவரை தான் என்று ஒருவர் நினைத்தால் தெய்வம் தான் என்று காட்டிவிடும். தெய்வத்தால் ஆகாதது ஒன்றுமில்லை. தெய்வத்தால் இன்று தளபதி ஆட்சி கட்டிலில் அமர இருக்கிறார். இது மக்கள் சக்தியாக மாறியுள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம். இது சரித்திர வரலாறாக இருக்கும். மக்கள் அவரை வாழ்த்துகிறார்கள். மக்கள் அவரை நேசிக்கிறார்கள். உயிராக நேசிக்கும் மக்களுக்கு அவர் என்றும் உறுதுணையாக இருப்பார். விஜய்யின் எண்ணங்கள், தொலைநோக்கு பார்வை, மனித நேயம் அனைத்தும் சிறப்பாக உள்ளது.
பெரும்பான்மை
அதனால் திமுக, அதிமுகவின் ஆட்சிகளை விட சிறப்பான ஒரு ஆட்சியை கொடுப்பார். தவெக ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லையே என்று பலரும் கேட்கிறார்கள். வேறு கட்சிகளின் ஆதரவு வருமா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்வது ஒன்று தான். "Wait and See" என்றார்.












Click it and Unblock the Notifications