ஒட்டுமொத்த கோவையும் எதிர்பார்க்கும் அவினாசி சாலை மேம்பாலம்.. எப்போது திறக்கப்படும்? மேஜர் தகவல்
கோவை: கோவையில் இப்போது அவினாசி ரோட்டில் மேம்பாலப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் கட்டுமானம் இந்தாண்டே முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் கட்டுமான பணிகள் நிறைவடையாமல் இருக்கிறது. இதற்கிடையே இப்போது கட்டுமானம் தீவிரமாக நடந்து வரும் சூழலில், இந்த மேம்பாலம் எப்போது கட்டி முடிக்கப்படும் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்குப் பிறகு முக்கியமான நகரம் என்றால் அது கோவைதான். விவசாயம், ஐடி, உற்பத்தி என பல்வேறு துறைகளிலும் கோவை அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

அவினாசி சாலை மேம்பாலம்:
இதனால் கோவையில் டிராபிக் பாதிப்பும் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினையைச் சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கோவை அவினாசி ரோட்டில் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. கோவை உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட்வின்ஸில் வரை இந்த உயர்த்தப்பட்ட சாலை அமைக்கப்பட இருக்கிறது.
சுமார் 10.01 கிமீ நீளத்தில் அமையும் இந்த சாலை மாநிலத்தின் மிகப் பெரிய உயர்த்தப்பட்ட சாலையாக இருக்கும். கடந்த 2020ல் இதற்கான கட்டுமானம் தொடங்கப்பட்ட நிலையில், கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. நான்கு வழிச்சாலையாக அமையும் இதன் கட்டுமானம் இந்தாண்டு இறுதியில் முடிவடையும் என முதலில் சொல்லப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் கட்டுமான பணிகள் நிறைவடையாமல் தொடர்ந்து தாமதம் ஆகிக்கொண்டே செல்கிறது.
கட்டுமானம் எப்படி இருக்கு:
இந்த உயர்த்தப்பட்ட சாலையில் மொத்தம் 305 தூண்களை அமைக்கத் திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதில் ஏற்கனவே 301 தூண்களின் கட்டுமானம் நிறைவடைந்துவிட்டது. நவ இந்தியா சந்திப்புக்கு அருகே மீதமுள்ள தூண்கள் கட்டப்பட இருக்கிறது. மேலும் இதில் பல்வேறு இடங்களில் சாலைக்குள் செல்லவும் வெளியேறவும் ரேம்ப்கள் அமைக்கப்படுகிறது.
இதற்கிடையே மேம்பாலத்தின் கட்டுமானம் தொடர்பாக இப்போது சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த மேம்பால டெக் கட்டுமான பணிகள் பெரும்பாலான இடங்களில் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். நவ இந்தியா சந்திப்பு மற்றும் ஹோப்ஸ் கல்லூரி பகுதிகள் தவிரக் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் இந்த பணிகள் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.
தீவிரம்:
இங்குத் தூண் அமைக்கும் பணிகள் முடிந்ததும், வாகனங்கள் செல்லும் டெக் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அடுத்தாண்டு மார்ச் 2025க்குள் பிரதான சாலை கட்டுமானத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹோப்ஸ் கல்லூரிக்கு அருகில் ஏற்கனவே ரயில் மேம்பாலம் இருக்கும் நிலையில், இந்த இடைவெளியை மட்டும் இணைக்கும் வகையிலான கட்டுமானம் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது.
எப்போது நிறைவடையும்:
ஏற்கனவே உப்பிலிபாளையத்தில் பிரதான ரேம்ப் அமைக்கும் பணி முடிந்துவிட்டது. கோல்ட்வின்ஸ் அமையும் ரேம்பின் கட்டுமான பணிகள் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. நவ இந்தியாவின் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள இறங்கும் ரேம்ப்பின் கட்டுமானம் நடந்து வரும் நிலையில், சித்ரா மற்றும் ஹோப்ஸ் காலேஜுக்கு அருகே டவுன்-ரேம்ப் கட்டுமானம் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இப்படி அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனைத்து டவுன் ரேம்ப்களின் கட்டுமான பணிகளும் முடிக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications