காசு எங்கே? கோவை திமுக சைலண்ட் ஆபரேஷன்.. ஸ்பீடாக வந்த கரூர் செக் டீம்.. விரைவில் விழப்போகும் தலைகள்?
கோயம்புத்தூர்: கோவை அரசியல் களம் தேர்தல் முடிந்து சில நாட்களான பின்பும் இன்னும் சூடு தணியாமல் இருக்கிறது. இங்குள்ள தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட தொகையில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்தப் பணிகளைக் கண்காணிக்கவும் தவறு செய்த உள்ளூர் நிர்வாகிகளைக் கண்டறியவும் கரூரில் இருந்து ஒரு சிறப்புப் படை கோவைக்கு வந்துள்ளதாம்.. இதை பற்றின செய்திதான் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுக நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக பணம் பட்டுவாடா
இதேபோல் தென்காசி ஆலங்குளம் தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் பேசியதாக ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இப்படி முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் விதிமீறல் புகார்களைச் சந்தித்து வரும் வேளையில், கோவையில் ஆளுங்கட்சியான திமுகவுக்குள் நடந்து வரும் "உள்வீட்டு விசாரணை" தான் இப்போது டாப் செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
கோயம்புத்தூர் எப்போதுமே அரசியல் களத்தில் ஒரு விடுகதையாகவே இருந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தமிழகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் கோவை நோக்கியே திரும்பியிருந்தது.
வேட்பாளர் தேர்விலிருந்து பிரசாரம் வரை அனல் பறந்த கோவையில், தேர்தல் முடிந்து பல நாட்கள் ஆகியும் இன்னும் அந்த அரசியல் பரபரப்பு அடங்கியபாடில்லை. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, தேர்தலுக்குப் பிந்தைய "உள்வீட்டு விசாரணை".
தேர்தல் நேரத்தில் களப்பணிகள் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு வாக்காளர்களைச் சென்றடையும் "முக்கியமான கவனிப்புகளும்" அரசியலில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன.
கோவை திமுக ஸ்பீடு
கோவையைச் சேர்ந்த நிர்வாகிகள் களத்தை கவனிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கோவை முழுவதும் முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறதாம்.. உள்ளூர் நிர்வாகிகள் எங்கே தவறு செய்துவிடுவார்களோ அல்லது கவனக்குறைவாக இருந்துவிடுவார்களோ என்ற அச்சமே இந்த "வெளியூர் டீம்" இறக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
இருந்தாலும் இவ்வளவு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் சில பகுதிகளில் சலசலப்புகள் வெடிக்கத் தொடங்கின. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் சில நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து மேலிடத்திற்குப் புகார்களும் பறந்தனவாம்..
"எல்லோருக்கும் போய்ச் சேர்ந்ததா?" என்ற ஒற்றைக் கேள்விக்கு, சில இடங்களில் இருந்து வந்த பதில்கள் திருப்திகரமாக இல்லை என்றும், வாக்காளர்கள் சிலரே நேரடியாக தொடர்புகொண்டு முறையிட்டபோதுதான், கொடுக்கப்பட்ட பொறுப்பில் சில குளறுபடிகள் நடந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கரூர் செக் டீம்
கிடைத்த தகவல்களின்படி, ஒரு பூத் கமிட்டிக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் கணிசமான அளவு வாக்காளர்களைச் சென்றடையாமல் "திசைமாறியுள்ளது" கண்டறியப்பட்டுள்ளதாம். சராசரியாக ஒரு பூத்தில் 200 வாக்காளர்களுக்குச் செல்ல வேண்டிய தொகை பாதியிலேயே தேங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த தலைமை, தற்போது கரூரில் இருந்து ஒரு தனிப் படையையே கோவைக்கு அனுப்பி 'ஆடிட்' வேலையைத் தொடங்கியிருப்பதாகவும் தெரிகிறது..
இந்தக் குழுவினர் பூத் வாரியாக சென்று, லிஸ்ட்டை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் ரகசியமாகத் தொடர்பு கொண்டு "உங்களுக்கு எல்லாம் சரியாக வந்ததா?" என்றெல்லாம் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
விரைவில் களையெடுப்பு
அதுமட்டுமல்ல எந்தெந்த ஏரியாவில் உள்ளூர் நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை, யார் பணத்தைக் கையாடல் செய்தார்கள் என்ற மற்றொரு லிஸ்ட்டும் ரெடியாவதாக தெரிகிறது..
இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கத் தனிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தினமும் கள நிலவரத்தை அறிக்கையாக அனுப்பி வருகிறார்கள். இந்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியானதுமே, கோவையில் அந்தந்தப் பகுதி நிர்வாகிகளிடையே பெரிய அளவிலான களையெடுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகான இந்த உள்வீட்டு விசாரணை, கோவை அரசியல் வட்டாரத்தில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது...!!!












Click it and Unblock the Notifications