விரிவுபடுத்தப்படும் கோவை மாநகராட்சி.. புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகள் எவை?
கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் மீட்டும் பெரிய மாநகராட்சியாக கோவை மாநகராட்சி உள்ள நிலையில், மாநகரின் எல்லையை விரிவுபடுத்தும் வகையில் நகரை ஒட்டிய பல கிராம ஊராட்சிகள், பேரூராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல மாநகராட்சிகள், நகராட்சிகள் நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டன. அரியலூர் நகராட்சி, செங்கல்பட்டு நகராட்சி, மன்னார்குடி, திருவாரூர், விருதுநகர் நகராட்சிகள், பொன்னேரி, ஆரணி, திருவதிபுரம், வந்தவாசி நகராட்சிகள் என்று பல மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.

அதேபோல, திருநெல்வேலி முதல் திருப்பூர் மாநகராட்சி, சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளன. திருச்சி, மதுரை, கரூர், ஓசூர், மாநகராட்சிகள் விரிவாக்கப்பட்டு உள்ளன. நீலகிரியில் அமைந்துள்ள ஊட்டி விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகமண்டலம் பேரூராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் தீர்மானம் முன்னதாக நிறைவேற்றப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தால் ஊட்டியை மாநகராட்சியாக விரிவாக்கம் செய்வது சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை ஊட்டியில் சூழலியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இதேபோல, கோவை மாவட்டத்திலும் கோவை மாநகராட்சியுடன் பல கிராம ஊராட்சிகள், பேரூராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து வருவாய் ஈட்டும் பெரிய மாநகராட்சியாக கோவை மாநகராட்சி உள்ளது. கோவை மாவட்டம் மொத்தம் 4,723 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.
கோவையில் நகரப் பகுதி மட்டும் 1,519 சதுர கிலோ மீட்டரை உள்ளடக்கி உள்ளது. மாநகரின் எல்லையை விரிவுபடுத்தும் வகையில், நகரை ஒட்டிய மற்றும் மாநகர எல்லைக்குள் வர தகுந்த பகுதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளுடன் 13 பேரூராட்சிகள் மற்றும் 196 கிராம ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 4 மாநகராட்சிகளுடன், 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளன. கோவையைப் பொறுத்தவரை, மாநகராட்சியுடன் ஒரு நகராட்சி, 4 பேரூராட்சிகள், 11 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. கிராம ஊராட்சிகளின் பதவிக் காலம் முடிந்தவுடன், கிராம ஊராட்சிகள் இணைப்புக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியுடன் மதுக்கரை நகராட்சி, இருகூர், பேரூர், பள்ளபாளையம், வெள்ளலுார் ஆகிய பேரூராட்சிகள், குருடம்பாளையம், சோமையம்பாளையம், பேரூர் செட்டிபாளையம், கீரணத்தம், நீலாம்பூர், மயிலம்பட்டி, பட்டணம், வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம், சின்னியம்பாளையம், சீரப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன.
இப்பகுதிகள் இணைக்கப்படுவதன் மூலம் 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சி 150 முதல் 200 வார்டுகள் உள்ள மாநகராட்சியாக உருவாகவுள்ளது. கிராம பஞ்சாயத்துகள் டிசம்பரில் காலாவதியானதும், இணைப்பு முன்மொழிவுகள் நிறைவேற்றப்படும். டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025க்குள் இந்த விரிவாக்கத்திற்கான பணிகள் மொத்தமாக முடிவு அடையும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications