பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் யார்? அமைச்சர் செந்தில்பாலாஜி கையில் லிஸ்ட்! ஸ்டாலின் சாய்ஸ்?
கோவை: பொள்ளாட்சி நகர்மன்றத் தலைவர் பதவிக்கான போட்டியில் 4 பெண் கவுன்சிலர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
சியாமளா நவநீதகிருஷ்ணன், மணிமாலா செல்வராஜ், சண்முகப்பிரியா, நர்மதா ஆகிய நால்வரில் ஒருவர் தான் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவியில் அமரக்கூடும் எனக் கூறுகிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.
இதனிடையே அதிமுக ஆதிக்கம் நிறைந்த பொள்ளாச்சிக்கு வலிமையான ஒருவரை நகராட்சி சேர்மனாக்க திமுக மேலிடம் பரிசீலனை செய்து வருகிறது.

பொள்ளாச்சி நகராட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி நகராட்சி திமுக வசமாகியுள்ளது. இது அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே பொள்ளாச்சி தொகுதியை திமுக தான் வெல்லும் என எதிர்பார்த்த ஸ்டாலின், இரண்டாயிரத்து சொச்சம் ஓட்டு வித்தியாசத்தில் திமுக வெற்றிவாய்ப்பை இழந்ததால் கடும் அப்செட் ஆனார். பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பெரியளவில் போராட்டங்கள் எல்லாம் நடத்தப்பட்டும் திமுக வெற்றிபெறவில்லையே என்ற ஆதங்கம் அந்தக் கட்சியினருக்கும் இருந்து வந்தது.

திமுக வெற்றி
இந்நிலையில் நடைபெற்று முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வட்டியும் முதலுமாக சேர்த்து பொள்ளாசியில் திமுக அபார வெற்றிபெற்றுள்ளது. பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்தப் பதவியை கைப்பற்றுவதற்கான போட்டியும் அதிகரித்துள்ளது. பொறியியல் கல்லூரி பேராசிரியரும் திமுக நிர்வாகி நவநீதகிருஷ்ணனின் மனைவியுமான சியாமளா தற்போதைய நிலவரப்படி சேர்மன் ரேஸில் முந்தி நிற்கிறார்.

பேராசிரியர் பணி
10 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராக பணியாற்றி வருபவர் என்பதோடு அவரது கணவர் மீது கடந்த அதிமுக ஆட்சியில் 37 வழக்குகளும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்த படியாக இளம்பெண் கவுன்சிலர்களான நர்மதா மற்றும் சண்முகபிரியா ஆகியோரது பெயர்களும் பொள்ளாட்சி நகராட்சி சேர்மன் பதவிக்கு பரிசீலனையில் உள்ளது. பொள்ளாச்சியை பொறுத்தவரை அதிமுகவின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த பகுதி என்பதால், அங்கு அனுபவம் இல்லாத புதுமுகங்ளை சேர்மன் பதவியில் அமரவைக்க தலைமை யோசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜி
இதேபோல் முன்னாள் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகள் மணிமாலாவும் நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக லாபி செய்து வருகிறார். மற்ற நகராட்சிகள் எப்படியோ கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் குறிப்பாக பொள்ளாச்சி நகராட்சியில் யாரை சேர்மனாக கொண்டு வருவது என்பது பற்றி திமுக தலைமையை முடிவு செய்யக்கூடும் எனக் கூறுகிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள். இதனிடையே நேற்று நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் கூட, யாருக்கெல்லாம் சேர்மன் ஆக வேண்டும் என விருப்பம் இருக்கிறதோ எல்லோரும் விருப்பமனு கொடுங்க என கேட்டு வாங்கியிருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.












Click it and Unblock the Notifications