Exclusive: தேமுதிகவில் எந்த மனக்கசப்பும் இல்லை! திமுகவில் இணைந்தது ஏன்? பனப்பட்டி தினகரன் பளிச்!
கோவை: தேமுதிகவில் மாவட்டச் செயலாளராக இருந்த அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பனப்பட்டி தினகரன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்து பிரேமலதாவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைய என்ன காரணம் அங்கு என்ன பிரச்சனை என்பது பற்றி அறிய நாம் அவரை தொடர்புக் கொண்டு பேசினோம்.
அப்போது நம்மிடம் அவர் கூறியதாவது;

தாய் வீடு
''திமுகவை பொறுத்தவரை எனக்கு தாய் வீடு. எனது அப்பா 35 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் கிளைக் கழகச் செயலாளராக இருந்தவர். நான் பிறக்கும் போதே திமுககாரன். எனது 27 வயது வரை திமுகவுக்காக தேர்தல் பணியாற்றியிருக்கிறேன். 2005ஆம் ஆண்டு நான் தேமுதிகவில் இணைந்தது முதல் என்ன அப்பா திமுக செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி அமைதியாக இருந்து வந்தார். இப்போது காலம் மீண்டும் தாய் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறது.''

மனக்கசப்பு இல்லை
''எந்தக் குழந்தைக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது ஒரு தாய்க்கு தெரியும். அதுபோல் திமுகவில் இணைந்துள்ள எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் நன்றாக தெரியும். அதனால் நான் எதையும் அது பற்றி பேச விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், தேமுதிகவில் இருந்தவரை கேப்டனுக்கு நான் விசுவாசமாக இருந்திருக்கிறேன். தேமுதிகவில் எனக்கு யார் மீதும் எந்த மனக்கசப்பும் இல்லை.''

சாமி கும்பிட்டேன்
''கேப்டன் ரசிகர் மன்றத்தில் இருந்ததை முதலமைச்சர் முன்னிலையிலேயே நேற்று பேசினேன். இன்று கூட அவருக்காக சாமி கும்பிட்டேன். மேற்கொண்டு தேமுதிகவை பற்றி பேச வேண்டாம் என நினைக்கிறேன். ப்ளீஸ் அந்த சப்ஜெக்ட் பற்றி கேட்கவேண்டாம். இனி கோவை மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றும் வகையில் எனது செயல்பாடுகள் இருக்கும். திமுகவில் இணைந்த போது முதலமைச்சரும் இதைத் தான் வலியுறுத்தினார். ''

இளம் வயது
கடந்த 2011-ஆம் ஆண்டு மிகவும் இளம் வயதில் சட்டமன்ற உறுப்பினரான பனப்பட்டி தினகரனின் திருமணத்தை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தினகரனுடன் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications