அதே பெயர்.. அதே இடம்.. பெரியார் பிறந்தநாளில் மீண்டும் உணவகம்! இந்து முன்னணியினர் தாக்கிய உரிமையாளர்
கோவை: காரமடை அருகே கண்ணார்பாளையத்தில் இந்து முன்னணியினரால் தாக்கப்பட்ட தந்தை பெரியார் உணவகம் உரிமையாளர் மீண்டும் அதே இடத்தில் பெரியார் பிறந்தநாளன்று கடையை திறப்பதாக அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ளது கண்ணார்பாளையம் பகுதி. இங்குள்ள நால் ரோட்டில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை நேற்று திறந்தார். திறப்பு விழாவை முன்னிட்டு ஊழியர்களுடன் நேற்று உணவகத்தில் சிறப்பு ஏற்பாடுகளை பிரபாகரன் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு உள்ளே சென்ற ஒரு கும்பல் பெரியார் உணவகத்தின் உரிமையாளர் பிரபாகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அப்போது கடையின் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். அத்துடன் அந்த கும்பல் ஹோட்டலையும் அடித்து நொறுக்கி இருக்கின்றனர்.

கும்பல் தாக்குதல்
கடையில் இருந்த உரிமையாளர் பிரபாகரனை கடுமையாக தாக்கிய அந்த கும்பல், அங்கிருந்த கடை ஊழியர் அருண் என்பவர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். உரிமையாளர் மற்றும் ஊழியரை தாக்கிவிட்டு உணவகத்தை துவம்சம் செய்த அந்த ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

மருத்துவமனையில் அனுமதி
இந்த தாக்குதலில் உணவக ஊழியர் அருண் படுகாயமடைந்து காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு 36 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடையின் உரிமையாளர் பிரபாகரனும் காயங்கள் காரணமாக சிகிச்சை பெற்றார்.

போலீசில் புகார்
இச்சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவர்களை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பெரியாரிய அமைப்புகள் சமூக வலைதளங்களிலில் வலியுறுத்தி வந்தனர்.

இந்து முன்னணி
இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ரவிபாரதி, சரவணகுமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிரபாகரன் ஆகியோரை காரைமடை போலீசார் கைது செய்து உள்ளனர். கைதான 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் அனைவரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கைதானவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்தல், ஆபாசமாக பேசியது, அத்துமீறியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெரியார் பிறந்தநாளில்
இந்த நிலையில் ஹோட்டல் உரிமையாளர் பிரபாகரன் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அப்போது வீடியோ எடுக்கும் நபர், "பெரியார் பெயர் வைத்ததால் தாக்கினார்கள். மீண்டும் அதே பெயரில் திறப்பீர்களா?" என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், "இந்த கேள்வியை நீங்கள் கேட்கவே கூடாது. கண்டிப்பாக அதே இடத்தில்தா நடத்துவேன். செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்தநாளன்று திறப்போம்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications