கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி!
கோயம்புத்தூர்: இதுவரை திமுகவால் அசைத்துக் கூட பார்க்க முடியாத கோவை மாவட்டத்தில் திமுக கொடி பறக்க வேண்டும் என்றால், அது செந்தில் பாலாஜியால் மட்டும் தான் முடியும் என திமுக தலைமை நம்புகிறதாம். அதனால், செந்தில் பாலாஜியே நேரில் களம் காண வேண்டும் என்றும் ஸ்டாலின் விரும்புகிறாராம்.
கருணாநிதி காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் திமுவிற்கு எட்டாக்கனியாகத்தான் இருந்து வருகிறது. அதனால் தான், 2021-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே கொங்கு மண்டலத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறார் ஸ்டாலின். 2021 தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ( கிருஷ்ணகிரி தொடங்கி திண்டுக்கல் வரை) உள்ள பத்து மாவட்டங்களில் 68 சடட்மன்ற தொகுதிகள் உள்ளன.

இவற்றில் 2021 தேர்தலில் அதிமுக கூட்டணி 44 இடங்களிலும், திமுக கூட்டணி 24 இடங்களிலும் வென்றன. ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் ஒன்றை கூட திமுகவோ, அதன் கூட்டணி கட்சிகளோ வெல்ல முடியவில்லை. எனவே, இந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும் என ஸ்டாலின் விருப்பப்படுகிறாராம். அதனால் கொங்கு மண்டல கிங் செந்தில் பாலாஜியை கோவையில் களமிறக்க ஸ்டாலின் முடிவடுத்துள்ளாராம்.
கரூரில் எப்படி, செந்தில் பாலாஜி கெத்தோ, அதே போல் கோவையில் எதிர்முகாமை சேர்ந்த எஸ்.பி.வேலுமணி செம்ம ஸ்ட்ராங்க். வேலுமணியின் கண்ணசைவிற்கு வேலை செய்ய அதிமுகவினர் காத்துகிடக்கிறார்களாம். அதனால் தான் கோவையில் திமுகவால் மண்ணெடுக்க முடியவில்லையாம்.
அதனால், வேலுமணிக்கு எதிராக செந்தில் பாலாஜியே நேரடியாக களத்தில் இறங்கினால் தான் வெற்றி பெற முடியும் என்பது திமுக தலைமையின் கணக்காம். அதனால், ஸ்டாலினே நேரிடையாக செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு கோவையில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுமாறு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செந்தில் பாலாஜி கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே, தேர்தல் பணிக்காக தன்னால் கோவையில் களமிறக்கப்பட்ட டீமிற்கே உள்ளூர் உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற குமுறல் இருக்கும் நிலையில், கோவையில் தான் போட்டியிடுவது விஷப்பரீட்சையாகிவிடும் என நினைக்கிறாராம் செந்தில் பாலாஜி. இதை எப்படி திமுக தலைமையிடம் சொல்வது எனவும் தவிக்கிறராம் அவர். கரூரில் நிற்பதும், ஜெயிப்பதும் செந்தில் பாலாஜிக்கு ஒரு பொருட்டே இல்லை.
எனவே, கரூரிலேயே முழு கவனமும் செலுத்தாமல், கொங்கு மண்டலத்தில் மற்ற மாவட்டங்களில் திமுக வெற்றிக்காக தன்னால் முழுவீச்சுடன் இயங்க முடியும். ஆனால், கோவையில் போட்டியிட்டால் தனது முழுக்கவனமும் அங்கு தான் இருக்கும் என்பதால் மற்ற மாவட்டங்களில் கோட்டைவிட நேரிடும் என நினைக்கிறாராம் செந்தில் பாலாஜி. இதை எப்படியாவது திமுக தலைமைக்கு புரியவைத்து விட வேண்டும் என படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறாராம் செந்தில் பாலாஜி.
-சிறப்பு நிருபர்












Click it and Unblock the Notifications