மகளிர் இடஒதுக்கீடு மசோதா: திமுக, காங்கிரஸ் பெண்களுக்கு இழைத்த துரோகம் - சந்திரபாபு நாயுடு தாக்கு
கோவை: டபுள் என்ஜின் அரசுகள் உள்ள மாநிலங்களில் வளர்ச்சி தானாக நடைபெறுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லை. பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாடு பெண்களுக்கு எதிரான துரோகம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
கோவை, கோல்ட் வின்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் கோவை தொழில் முனைவோர் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு , பெம்மாசணி சந்திரசேகர், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் பங்கேற்றனர்.

மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் எஸ்பி வேலுமணி , சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே ஆர் ஜெயராமன், கோவை தெற்கு வேட்பாளர் அம்மன் அர்ஜூனன், சூலூர் தொகுதி வேட்பாளர் கந்தசாமி, கவுண்டம்பாளையம் தொகுதி பி.ஆர்.ஜி அருண்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கலந்துரையாடல் நிகழ்விற்கு பின்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நிலையான ஆட்சி நடைபெற்று வருகிறது. "டபுள் என்ஜின்" அரசுகள் உள்ள மாநிலங்களில் வளர்ச்சி தானாக நடைபெறுகிறது. இதற்கு மாறாக தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதுவும் இல்லை.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாடு பெண்களுக்கு எதிரான துரோகம். அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீதம் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அதில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும். மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே.
இது தேசிய ஜனநாயக கூட்டணியில் தோல்வி அல்ல, நாட்டின் பெண்களின் தோல்வி. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ள நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பை திமுக மற்றும் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகள் கிளப்புகின்றன.
1971 மக்கள் தொகை அடிப்படையில் முன்பே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி குறித்து பேசிய அவர், முதலில் வளர்ச்சி வேண்டும், வளர்ச்சியால் செல்வம் உருவாகும், அதிலிருந்து வருவாய் கிடைக்கும், பின்னரே நலத்திட்டங்கள் நிலையானதாக இருக்கும். வளர்ச்சி இல்லாமல் நலத்திட்டங்கள் மட்டும் நீடிக்க முடியாது.
ஆந்திராவில் கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளை இணைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் காவேரிக்கும் நீர் வழங்கும் வாய்ப்பு உருவாகும். கங்கா காவேரி இணைப்பு மோடி ஆட்சி தொடரும் பட்சத்தில் நடக்கும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு மிக முக்கியம். தொழில்நுட்பத்தின் உதவியுடன் அனைத்து அரசுகளும் செயல்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications