அடங்காத கோத்தபாய ராஜபக்சே.. இந்தியாவும் கைவிரிப்பு- சிங்கப்பூரில் இருந்து மீண்டும் ரிட்டர்ன்?
கொழும்பு: இலங்கையை விட்டு தப்பி ஓடி சிங்கப்பூரில் பதுங்கி இருக்கும் மாஜி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே அடுத்த மாதம் மீண்டும் இலங்கைக்கு திரும்ப இருப்பதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இலங்கையின் பொருளாதார பேரழிவை சீரமைக்க முடியாமல் ராஜபக்சே சகோதரர்கள் பிரதமர், ஜனாதிபதி பதவிகளில் இருந்து விலகிவிட்டனர். இதில் ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சே, மாலத்தீவுக்கு முதலில் ஓடினார். அங்கிருந்து பெரும் போராட்டத்துக்குப் பின்னர் சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் 15 நாட்கள் மட்டுமே தங்கி இருக்க கோத்தபாயவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஏதேனும் வெளிநாடு ஒன்றில் அகதியாக தஞ்சமடையவே கோத்தபாய காத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கோத்தபாயவைப் பொறுத்தவரையில் இந்தியாவில் அடைக்கலம் கோர விரும்புகிறார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் தொடக்கம் முதலே இந்திய மத்திய அரசு கோத்தபாயவை ஆதரிக்க தயாராக இல்லை; அடைக்கலம் தர தயாராக இல்லை என கூறிவிட்டது.
தற்போது தஞ்சமடைந்துள்ள சிங்கப்பூரில் நீண்டகாலம் தங்க முடியாத நிலை உள்ளது. இதனால் சவுதி அரேபியாவில் அடைக்கலம் கேட்க வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையில் புதிய ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெறும். இலங்கையின் புதிய ஜனாதிபதி பதவிக்கு மொத்தம் 4 பேர் போட்டியிடுகின்றனர்.
Recommended Video
இந்நிலையில் கோத்தபாய ராஜபக்சே, இலங்கைக்கு திரும்பக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் தீவிர அரசியலில் கோத்தபாய ராஜபக்சேவுக்கு இனி இடம் இல்லை என்ற போதும் குடும்பத்தினரை சந்தித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக இலங்கைக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் கோத்தபயா வரக் கூடும் என்கின்றன சிங்கள ஊடக தகவல்கள்.