இப்படியே நீடித்தால்.. இலங்கையில் இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்.. அதிபர் சிறிசேனா எச்சரிக்கை
கொழும்பு: இலங்கையில் குண்டுவெடிப்புக்கு இரு பிரிவினரிடையே தொடந்து பதற்றம் நிலவுகிறது. இதனால் இன்னொரு பிரபாகரன் உருவாகும் நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாஎச்சரித்துள்ளார்.
இலங்கையில் தேவாலயங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இலங்கையில் பவுத்த மற்றும் முஸ்லீம் பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் மிகமோசமான வன்முறையாக மாறிய பின் கட்டுப்படுத்தப்பட்டது. இப்போதும் அங்கு இருபிரிவினரிடையே பதற்றம் காணப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கையின் முல்லைத் தீவில் சனிக்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிபர் மைத்ரிபால சிறீசேனா, "இலங்கையில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு நீடித்தால் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போல் இன்னொரு தலைவர் உருவாகும் நிலை ஏற்படும்.
இப்போது நாடு பிளவுபட்டிருப்பது என்பது உண்மைதான். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் பிரிந்து நிற்கிறார்கள். ஆனால் இதை இப்படியே விட்டுவிடக்கூடாது. நாம் பிரிந்து இருந்தால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பை உருவாக்கிவிடும். ஆகவே இலங்கையில் முஸ்லீம் பிரபாகரன் உருவாக நாமே வழியை ஏற்படுத்திவிட வேண்டாம். அது இன்னொரு உள்நாட்டு போருக்கு வித்திடும்.
எனவே அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுபட்டு முன்னேற்ற பாதையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டும்.எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை தலையெடுக்க விட்டுவிடாதீர்கள்" இவ்வாறு சிறீசேனா கூறினார்.
பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் என்ற பெயரில் தனிப்பகுதியாக இலங்கையில் விடுதலைப் புலிகள் செயல்பட்டு வந்தனர். 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் பிரபாகரன் உள்பட விடுதலைப் புலிகள் மொத்தமாக அழிக்கப்பட்டனர். இதில் ஏராளமான அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர். இதன் பிறகு 10 ஆண்டுகளாக பெரிய அளவில் எந்த அசம்பாவிதமும் இலங்கையில் நிகழாமல் இருந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயங்களை குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி மிகப்பெரிய உயிர்சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் பவுத்த மற்றும் இஸ்லாமியர்கள் இடையே அங்கு பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications