"சஞ்சீவினி".. 11 ஆயிரம் மெட்ரிக் டன் இந்திய அரிசி.. புத்தாண்டையொட்டி இலங்கைக்கு கப்பலில் சென்ற உதவி
கொழும்பு: இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை புத்தாண்டையொட்டி இந்தியா அனுப்பிய 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கப்பல் மூலம் இன்று கொழும்புவை சென்றடைந்தது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்துள்ளது. பிற நாட்டுக்கு கரன்சிக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு பலமடங்கு அதிகரித்தது. இது இலங்கையின் பொருளாதாரத்தை முடக்கி போட்டுள்ளது.
இதனால் அங்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் போராட்டம்
இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். தற்போது தலைநகர் கொழும்புவில் உள்ள காலே ரோட்டில் அமைந்திருக்கும் காலிமுகத்திடலில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இங்கு இரவு பகலாக போராட்டம் தொடர்கிறது. இன்று 4வது நாளாக மாபெரும் அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி
இந்நிலையில் தான் இலங்கைக்கு இந்தியா சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் கடனுதவியும் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்தியாவில் இருந்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசு சென் குளோரி கப்பலில் இன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது. இதுபற்றி இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

புத்தாண்டையொட்டி...
இலங்கையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 13, 14ல் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் இந்தியா உதவியாக வழங்கிய அரிசி அங்கு சென்றுள்ளது. இதுபற்றி இந்திய தூதரகம் கூறுகையில், ‛‛இந்தியா கடந்த வாரத்தில் மட்டும் 16,000 மெட்ரிக் டன் அரிசியை இலங்கைக்கு அனுப்பியது. தற்போது 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வந்துள்ளது. இது இந்தியா-இலங்கை இடையேயான உறவை அதிகரிக்கும்'' என கூறியுள்ளது.

இந்தியாவின் உதவிகள் என்னென்ன
இந்தியா ஏற்கனவே இலங்கைக்கு 2,70,000 மெட்ரிக் டன் எரிபொருள் வழங்கியுள்ளது. மேலும் பொருளாதார மேம்பாட்டுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக அறிவித்தது. பிப்ரவரியில் இந்தியா-இலங்கை பெட்ரோலியத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து பெட்ரோல் கொள்முதலுக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலரை குறுகிய கால கடனாக இந்தியா வழங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications