அடடே வியூகம்... பிராந்திய பாதுகாப்புக்காக கைகோர்க்கும் இந்தியா-இலங்கை-மாலத்தீவு!
கொழும்பு: பிராந்திய பாதுகாப்பு குறித்து இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, தமது முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கிருந்து 4 மணிநேர பயணமாக இலங்கைக்கு சென்றார்.
இலங்கையில் மோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ஈஸ்டர் தாக்குதல்கள் நடைபெற்ற கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் அஞ்சலி செலுத்தினார்.

மோடிக்கு வரவேற்பு
இதன்பின்னர் அலரி மாளிகையில் மோடிக்கு முப்படை மரியாதையுடன் செங்கள வரவேற்பளித்தார் அதிபர் மைத்திரிபால சிறிசேன. பின்னர் மகிந்த ராஜபக்சே, இரா. சம்பந்தன் உள்ளிட்டோரையும் இந்தியர்களையும் சந்தித்தார் மோடி.

ரணிலுடன் காரில் ஆலோசனை
இச்சந்திப்புகளுக்குப் பின்னர் கொழும்பு விமான நிலையம் செல்லும் வழியில் காரில் ரணில் விக்கிரமசிங்கேவுடன் மோடி ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ரணில் விக்கிரமசிங்கே பதிவிட்டுள்ளதாவது:

நம்பிக்கை அதிகரிக்கும்
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஆதரவு தெரிவித்த இந்திய பிரதமர் மோடிக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன். இலங்கை மீதான நம்பிக்கையை மோடியின் பயணம் வலுப்படுத்தும். இலங்கைக்கு ஏராளமான மக்கள் வருகை தருவதை ஊக்கப்படுத்தும்.

இலங்கை-இந்தியா-மாலத்தீவு
இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக மோடியுடன் உரையாடினேன். மாலத்தீவு, இலங்கை மற்றும் இந்தியா இணைத்து பிராந்திய பாதுகாப்புக்கான முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவது குறித்து விவாதித்தோம். இலங்கையில் இந்தியா தொடர்பான அனைத்து திட்டங்களும் விரிவுபடுத்தப்படும் என உறுதி அளித்தேன்.

பயிற்சி அவசியம்
இலங்கை ராணுவத்துடன் இந்தியா நெருக்கமான உறவைப் பேணி, தீவிரவாத செயல்களை முறியடிக்கும் பயிற்சிகளை வழங்க வேண்டும். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு விமான நிலையங்களை பிராந்திய நிலையங்களாக மாற்றம் செய்வது குறித்து விவாதித்தோம்.
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே பதிவிட்டுள்ளார்.
இலங்கை ராணுவத்துடன் இந்தியா நெருக்கமான உறவைப் பேணி, தீவிரவாத செயல்களை முறியடிக்கும் பயிற்சிகளை வழங்க வேண்டும். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு விமான நிலையங்களை பிராந்திய நிலையங்களாக மாற்றம் செய்வது குறித்து விவாதித்தோம்.
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications