மலேசியா, இலங்கையில் திடீரென 'புலிகள்' விவகாரம்... கோத்தபாயவை ஜெயிக்க வைக்க பக்கா அரசியல் 'ஸ்கெட்ச்'?
கொழும்பு: மலேசியாவிலும் இலங்கையிலும் திடீரென தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது, முன்னாள் போராளி குடும்பத்துடன் கைது என நடவடிக்கைகள் தீவிரமடைந்திருப்பதன் பின்னால் அரசியல் இருப்பதாகவே கூறப்படுகிறது.
இலங்கையில் நவம்பர் 16-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவும் எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தபாய ராஜபக்சேவும் போட்டியிடுகின்றனர்.

சஜித் பிரேமதாச தமது முதலாவது பிரசார கூட்டத்தை அண்மையில் கொழும்பு காலிமுகத் திடலில் நடத்தினார். அந்த கூட்டத்துக்கு இலங்கை முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். தென்னிலங்கை சிங்களர் சஜித்துக்கு பேராதரவை காட்டுகிறார்கள் என்பதையே அது வெளிப்படுத்தியிருந்தது.
இது கோத்தபாய ராஜபக்சே தரப்புக்கு பெரும் பீதியை கிளப்பியிருந்தது. இலங்கை அதிபர் தேர்தலில் சிங்களர் வாக்குகளைத் தக்க வைக்க எப்போதுமே விடுதலைப் புலிகள் விவகாரம் கேடயமாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
விடுதலைப் புலிகள், தமிழர்களை ஒரு பக்கமாகவும் சிங்களரை ஓரணியிலும் திரட்டுவதற்காகவே இந்த யுக்தியை சிங்கள தலைவர்கள் பின்பற்றி வந்தனர். தற்போது களத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமே இல்லை. இந்த சூழ்நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு சிங்களரின் பேராதரவு நீடித்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு அரசியல் சதியாகவே மலேசியா, இலங்கையில் விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மலேசியாவில் திடீரென விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார்கள்; ஓராண்டு காலம் கண்காணித்து கைது செய்கிறோம் என அடுத்தடுத்து கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதேபாணியில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதங்களை இன்னமும் வைத்திருக்கிறார் எனக் கூறி முன்னாள் போராளி ஒருவரை குடும்பத்துடன் இலங்கை ராணுவம் கைது செய்திருக்கிறது.
அதாவது விடுதலைப் புலிகள் மீண்டும் வந்துவிடுவார்கள்; அவர்களை ஒழிக்கும் வல்லமை பெற்றவர் கோத்தாபாய ராஜபக்சே என்கிற சூழ்நிலையை உருவாக்கவே இக்கைது நடவடிக்கைகள் என்று தமிழர் தரப்பில்ல குற்றம்சாட்டப்படுகிறது.
நீங்க நடத்துங்க ராசா!












Click it and Unblock the Notifications