அதெல்லாம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது.. மீண்டும் முருங்கை மரம் ஏறிய மகிந்த ராஜபக்சே
கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியை தாம் ராஜினாமா செய்ய முடியாது; அப்படி செய்தால் இலங்கையின் நிலைத்தன்மை சீர்குலைந்து போகும் என்று மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி 2 மாதங்களாக போராட்டங்கள் தொடருகின்றன. கோத்தபாயவே வீட்டுக்குப் போ என்ற முழக்கம் இலங்கையின் புதிய புரட்சி முழக்கமாகிவிட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் சிங்களர், தமிழர், முஸ்லிம் என மூவின மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

இந்த போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் கோத்தபாய, மகிந்த மீது நம்பிக்கை இல்லாத தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ளன. இந்த தீர்மானங்கள் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே கொழும்பில் இன்று ஆளும் கட்சி எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகிந்த ராஜபக்சேவும் பங்கேற்றார். இக்கூட்டத்தில் பேசிய மகிந்த ராஜபக்சே, நாடாளுமன்றத்தில் எந்த ஒரு சிறப்பு அறிக்கையும் தாக்கல் செய்யப் போவதும் இல்லை; பதவியை ராஜினாமா செய்யப் போவது இல்லை. தாம் பதவியை ராஜினாமா செய்தால் நாடு நிலைத்தன்மையை இழந்துவிடும். ஆகையால் பதவி விலகப் போவது இல்லை. மேலும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார். இத்தகவலை எம்.பி. தினேஷ் குணவர்த்தன் உறுதி செய்தார்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சேவின் அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவோர்களை அங்கு இருந்து அகற்றுமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அத்துடன் போராட்டத்தினால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதனால் அவர்களை அகற்றுமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நடைபாதையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் சாலையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் அமைதியான வழியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று நீதிபதி மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications