ஒருபுறம் ஏர்போர்ட்.. மறுபுறம் கப்பல்! தப்பி செல்லும் ராஜபக்ச உள்ளிட்ட விஜபிக்கள்! இலங்கை எம்பி பரபர
கொழும்பு: இலங்கையில் இப்போது என்ன மாதிரியான சூழல் நிலவி வருகிறது என்பது குறித்து கொழும் எம்பி மனோ கணேசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Recommended Video
பல மாதங்களாக மிக மோசமான நிலையில் இருக்கும் இலங்கை பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. அத்தியாவசிய பொருட்களுக்கும் அங்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்தச் சூழலில் அங்கு இலங்கையில் மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இலங்கை அதிபர் மாளிகையைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு உள்ளனர்.

தீர்வு வேறு
இந்தச் சூழலில் இலங்கையில் இப்போது நிலவும் சூழல் குறித்து கொழும் எம்பி மனோ கணேசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "இங்குப் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலிலும் தீர்வு எது என்பதில் இங்குள்ள தமிழ் மக்களுக்கும் சிங்களர்களுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வு வேறு.. நாங்கள் எதிர்பார்க்கும் தீர்வு வேறு.

அவர்கள் தீர்வு
சிங்கள மக்களைப் பொறுத்தவரை இன்று ராஜபக்ச என்ற தனி நபரையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்துப் போராடுகிறார்கள். அவரை பதவியில் இருந்து விரட்டி விட்டு தங்களுக்கு அபிமானமான மற்றொரு தலைவரை அந்த பதவிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எதிர்ப்பது ராஜபக்ச என்ற தனிநபரை அல்ல.

எங்கள் தீர்வு
ராஜபக்ஷச போன்றோர் முன்னிறுத்தும் இனவாதத்தைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். மதவாதம், அடிப்படை வாதம், ராணுவ வாதகொள்கைகளைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். எனவே நாங்கள் முன்வைக்கும் தீர்வும். அவர்கள் வைக்கும் தீர்வும் வேறு வேறு ஆனது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதே வேளையில் இன்று நாட்டில் அனைத்து கட்சிகளுக்கு அப்பாற்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

விமான நிலையம்
இப்போது கொழும்பில் அமைந்துள்ள அதிபர் மாளிகையையும் அதிபர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு உள்ளனர். அங்கு உள்ளேயும் போராட்டக்காரர்கள் நுழைந்துவிட்டனர். இருப்பினும், அங்கே அதிபர் இருப்பதாகத் தெரியவில்லை. சற்று முன் சமூக வலைதலங்களில் வெளியான செய்தியைப் பார்த்திருப்பீர்கள். கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஏகப்பட்ட விஐபி கார்கள் சென்று கொண்டிருக்கிறது. அதற்குள் யார் இருந்தார்கள் என்று உறுதியாகத் தெரியவில்லை.

கப்பல்
அதேபோல கொழும்பு துறைமுகத்தில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்களில் சில விஐபிக்கள் தப்பிச் சென்றதாகக் காட்சிகள் வெளியாகி உள்ளது. துறைமுகத்துக்குப் பொறுப்பான அதிகாரி கூட கப்பல்கள் மூலம் சில விஐபிக்கள் சென்றுள்ளதாகக் கூறினார். இருப்பினும் அவர் யார் சென்றுள்ளார் என்பதைக் குறித்த தகவல்களைக் கூற மறுத்து விட்டார்.

முற்போக்குத்தனமான மாற்றம்
இந்த போராட்டம் மக்களை ஒன்று சேர்த்துள்ளது. ஆனால் இந்த பொருளாதார நெருக்கடி மட்டுமே மக்களை ஒன்று சேர்த்தற்கான காரணம் என்று சொல்ல முடியாது. அனைத்து மாற்றங்களும் நெருக்கடியினால் தான் வரும். ஆனால் என்ன மாதிரியான மாற்றம் வருகிறது என்பதே முக்கியம். அடுத்து வரும் மாற்றம் என்பது முற்போக்குத்தனமான மாற்றமாக இருக்க வேண்டும்.

மீண்டும் இனவாதம்
பெரும் பொருளாதார தீர்வை மட்டுமே ஒட்டியதாக மாற்றம் இருக்கக் கூடாது. உணவு, பெட்ரோல் போன்றவற்றுக்குத் தட்டுப்பாடுகள் குறைந்து விட்டால் மீண்டும் பழைய இனவாத நிலைக்கு நாடு திரும்பி விடலாம். எனவே அப்படி ஆகக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம். இது தொடர்பாகப் போராட்டக்காரர்கள் உடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications