உரம் கொள்முதல் செய்ய இந்தியாவிடம் மேலும் ரூ427.8 கோடி கடன் கேட்கும் இலங்கை!
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் இலங்கை, உரம் கொள்முதல் செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து ரூ427.8 கோடி கடன் கேட்டிருக்கிறது.
இலங்கையின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கிப் போயுள்ளது. இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளிலும் நிலையற்றதாக மாறிவிட்டது. இலங்கை மக்களின் தொடர் போராட்டங்களால் பிரதமர் பதவியை இழந்தார் மகிந்த ராஜபக்சே.
தற்போது ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அனைத்து கட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது. பொருளாதாரத்தை சரி செய்வதற்காக ரணில் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இலங்கைக்கு இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசும் இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளிடம் இருந்து பெருமளவு கடன் பெறுவதில் இலங்கை தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிடம் இருந்து மேலும் ரூ427.8 கோடி கடன் கேட்கிறது இலங்கை. அந்நாட்டுக்கு தேவையான உரம் கொள்முதல் செய்ய இந்த கடனுதவியை இலங்கை கேட்டுள்ளது. இதற்கான தீர்மானத்துக்கு இலங்கை அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதனிடையே இலங்கைக்கான இந்திய தூதர் பாக்லேவுடன் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவின் உதவிகளுக்கு ஜி.எல்.பீரிஸ் நன்றி தெரிவித்தார்.