2 ஆண்டுகளுக்கு முன் இலங்கை அரசின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ' மனித வெடிகுண்டு'
Recommended Video
கொழும்பு: இலங்கையில் 47 பிஞ்சு குழந்தைகள் உட்பட 359 பேரை பலி கொண்ட மனித வெடிகுண்டு நபர்களில் ஒருவர் இலங்கை அரசிடம் 2 ஆண்டுகளுக்கு முன் சிறந்த ஏற்றுமதியாளர் என்கிற சாதனை விருது பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடி என்றாலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளராக இருந்த கருணா, 300 இஸ்லாமியர்களை தொழுகையின் போது படுகொலை செய்த சம்பவம்தான் இலங்கைவாசிகளுக்கு நினைவில் வரும். அதே மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த மெளலவி சஹ்ரான் ஹாசீம் என்கிற பயங்கரவாதி தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்புதான் இப்போது 47 குழந்தைகள் உட்பட 359 பேரை மனித வெடிகுண்டுகளால் பலி கொண்டிருக்கிறது.
ஈராக், சிரியாவில் வெறியாட்டம் போடும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிவரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட ஹாசீம் இலங்கையில் அதன் கருத்துகளைப் பரப்புவதில் தீவிரம்காட்டினார். மட்டக்களப்பு காத்தான்குடியில் தனியே ஒரு பள்ளிவாசலை உருவாக்கி அதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை மூளைச்சலவை செய்துள்ளார்.
ஷரியத் சட்டத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும்; இலங்கையிலும் ஒரு இஸ்லாமிய தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் ஹாசீமின் கொள்கை. ஆனால் மட்டக்களப்பு வாழ் தமிழர்கள் ஹாசீமை ஒரு பொருட்டாக கருதாமல் இருந்துள்ளனர். தென்னிலங்கை இஸ்லாமிய இளைஞர்கள் ஹாசீமின் பேச்சில் மயங்கி மனித வெடிகுண்டுகளாக சிதறிப் போயுள்ளனர்.
இலங்கை குண்டுவெடிப்பு.. முன்கூட்டியே எச்சரிக்கை.. இந்தியாவுக்கு தகவல் கிடைத்தது எப்படி?
இப்படி மனித வெடிகுண்டாக மாறிய இளைஞர்கள் தொழிலதிபர் இப்ராஹிம் என்பவரது மகன்கள். இந்த இப்ராஹிமுக்கு 2016-ம் ஆண்டு இலங்கை அரசு சிறந்த ஏற்றுமதியாளர் விருதை வழங்கியது. இந்த விழாவில் மனித வெடிகுண்டாகி மரணித்துப் போன தீவிரவாதியும் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் கல்வி கற்றுவிட்டு இலங்கை திரும்பிய அந்த இளைஞர் ஹாசீமின் தீவிரவாத மொழிக்கு இரையாகிவிட்டார்.
படம்: இலங்கை அமைச்சர் சுஜீவ சேனசிங்க, தொழிலதிபர் இப்ராஹிம், மனித வெடிகுண்டாக வெடித்த இப்ராஹிம் மகன்