சி.ஐ.ஏ. உருவாக்கியதுதான் ஐ.எஸ்.ஐ.எஸ்.... அமெரிக்காவே வெளியேறு... இலங்கையில் கலகக் குரல்
கொழும்பு: ஈஸ்டர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து விசாரணைக்காக அமெரிக்காவின் புலனாய்வு அதிகாரிகள் இலங்கையில் முகாமிட்டுள்ளதற்கு தேசிய சுதந்திர முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. உருவாக்கியதுதான் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு; அதுதான் இத்தாக்குதல்களை நடத்தியிருக்கிறது; ஆனால் அமெரிக்காவோ விசாரணை என நாடகமாடுகிறது என தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பி. ஜயந்த சமரவீர சாடியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் ஜயந்த சமரவீர கூறியதாவது:

பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்கிற போர்வையில் அமெரிக்கா, இங்கிலாந்தின் புலனாய்வு அமைப்புகளை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டாம். ஐ.எஸ். என்கிற இஸ்லாமிய அமைப்பை உருவாக்கியதே அமெரிக்காதான்.
பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தூண்டிவிட்டு குறிப்பிட்ட நாடுகளுக்குள் நுழைந்து அதிகாரம் செய்வதுதான் அமெரிக்காவின் வேலை. எண்ணெய் மற்றும் இயற்கை வளங்கள் உள்ள நாடுகளை தம்பிடியில் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் திட்டம் இது. லிபியா, சிரியா, ஈராக்கில் இதனைத்தான் அமெரிக்கா செய்தது.
விடுதலைப் புலிகளை ஒழித்த இலங்கை ராணுவத்துக்கு வெளிநாட்டு உதவிகள் தேவை இல்லை. இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தாலே போதும்.
இவ்வாறு ஜயந்த சமரவீர கூறினார்.












Click it and Unblock the Notifications