மெஜாரிட்டியே இல்லாத சிறிசேனா.. விக்கிரமசிங்கேவை நீக்கியது ஏன்..??
கொழும்பு: ரணில் விக்கிரமசிங்கே இல்லாவிட்டால் சிறிசேனா அரசுக்கு மெஜாரிட்டி கிடையாது. இந்த நிலையில் விக்கிரசிங்கேவை ஏன் இலங்கை அதிபர் சிறிசேனா நீக்கினார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னையும், கோத்தபயா ராஜபக்சேவையும் கொலை செய்ய சதி நடப்பதாக சில வாரங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார் சிறிசேனா. இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கும், ரணிலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த மோதல்தான் தற்போது வெடித்து கூட்டணியை விட்டு விலகும் முடிவுக்கு சிறிசேனாவை இட்டுச் சென்றுள்ளது.
சிறிசேனா, ராஜபக்சே கட்சி இணைந்து நாடாளுமன்றத்தில் 95 பேர் தான் உள்ளனர். அதேசமயம், ரணில் விக்கிரசிங்கேவுக்கு மட்டும் 106 எம்.பிக்கள் உள்ளனர். எனவே மெஜாரிட்டி இல்லாத சிறிசேனா அரசு, எப்படி பிரதமர் பதவியிலிருந்து விக்கிரசிங்கேவை நீக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த நாட்டுச் சட்டப்படி மெஜாரிட்டி இல்லாத அரசால் பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியாது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சே கட்சி பெரும் வெற்றி பெற்றது. அது முதலே ரணில் கட்சிக்கும், சிறிசேனா கட்சிக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கொலைச் சதியில் அது பெரிதாக மாறி இப்போது ராஜபக்சேவை பிரதமராக்கி விட்டது.