விருத்தாசலம் அருகே கார் மீது மீன் லாரி மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலி
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கார் மீது மீன் லாரி மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.
விருத்தாசலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஒரு மீன் லாரியும் வந்து கொண்டிருந்தது.
கடலூர் மாவட்டம் நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி மற்றும் உறவினர்கள் குடும்பத்தோடு விருத்தாச்சலம் அருகே உள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் மொட்டை அடிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பெரியநெசலூர் கிராமம் அருகே சென்றபோது திடீர் என்று மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதில் மீன் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வேலுசாமி மனைவி ரேவதி மற்றும் அவருடைய மகள் பவானி, பரிமளா இறந்தனர்.
வண்டியில் வந்த கிளீனர் சம்பவ இடத்தில் இறந்தார். அறிவரசன், பிரித்திவி சாய், ரேணுகாதேவி, மணிமேகலை, லாரி டிரைவர் தேவா ஆகியோர் பலத்த காயமடைந்து வேப்பூர் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் பெரம்பலூர் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் விருத்தாசலம் - சேலம் சாலையில் நடந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மீன் லாரியில் வந்த மீன் கொட்டி கிடந்ததால் அப்போது அங்கு உள்ள பொதுமக்கள் மீன்களை எடுத்து சென்றனர்.