பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்: வீடியோ வெளியிட்டவர் கைது ஏன்?.. போலீசார் விளக்கம்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து தாலி கட்டிய விவகாரத்தில் வீடியோவை இணையத்தில் வெளியிட்டவரை ஏன் கைது செய்தோம் என்பது குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவர் ஒருவர் மஞ்சள் கயிறு தாலி கட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
இந்த வீடியோ ஆதரத்தை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கினர். சிதம்பரம் போலீசார், வீடியோவில் இருந்த மாணவி மற்றும் மாணவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து வரவைத்து விசாரணை நடத்தினர்.

வீடியோவை பதிவிட்டவர் கைது
இதற்கு மத்தியில் இந்த விவகாரம் பற்றி தகவல் அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரம்யா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து மாணவி மற்றும் மாணவரிடம் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 3 நாட்கள் கவுன்சிலிங் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பாலாஜி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் விளக்கம்
சமூக வலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதற்கு ஏன் கைது செய்யபட்டார் என சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், இது குறித்து சிதம்பரம் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். போலீசார் இது குறித்து கூறுகையில், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் கயிற்றால் ஆன தாலியை கட்டுவது போன்ற வீடியோ நேற்று எங்கள் (போலீசார் ) பார்வைக்கு வந்தது.

குழந்தை திருமண சட்டத்தில்
உடனடியாக மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மாவட்ட சிறார்கள் பாதுகாப்பு மைய அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் உள்ள சிறார்களின் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் ரகசியமாக விசாரிக்கும் படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க துறை அலுவலர்கள் விசாரணை நடத்திய பிறகு குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

பேஸ்புக் வாட்ஸ் அப்பில் முகம் தெரியும்படி
இந்த நிலையில், சிதம்பரம் தாலுகாவை சேர்ந்த பாலாஜி கணேஷ் என்பவர் தனது வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் இளம் சிறார்களின் அடையாளங்கள் தெளிவாக தெரியும் படி வீடியோவை பரப்பியிருக்கிறார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் பாலாஜி கணேஷை தொடர்பு கொண்டு, தங்கள் மகளின் படத்தை வெளியிட்டதால், எதிர்காலம் பாதிக்கப்படும் என்று நியாயம் கேட்டுள்ளனர்.

மாணவியின் பெற்றோர் புகார்
அப்போது, மாணவியின் பெற்றோரை பாலாஜி கணேஷ் அவதூறாக திட்டியுள்ளார். இதனால், காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட இளம் சிறுமியின் புகைப்படத்தை அடையாளப்படுத்தி மானபங்க படுத்தி நியாயம் கேட்டவர்களை அவதூறாக பேசியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யபட்டுள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications