பிளாக்மெயில் செய்வது அரசியல் இல்லையா.. மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமான கேள்வி
கடலூர்: மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதியைத் தருவோம் என பிளாக்மெயில் செய்வது அரசியல் இல்லையா? கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா? பல மொழிக்கொள்கை கொண்ட இந்திய நாட்டைஒரு மொழி நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா? பல்வேறு மொழிப்பேசும் இன மக்கள் வாழும் நாட்டை, ஒற்றை இன நாடாக மாற்ற நினைப்து அரசியல் இல்லையா? ஒரு திட்டத்துக்கான நிதியை கொடுக்க இன்னொரு திட்டத்தை ஏற்கச் சொல்வது அரசியல் இல்லையா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூரில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "நான் சவாலாக சொல்கிறேன்.. இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது இப்படி ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து செய்கிற அரசு இருக்கிறதா.. ஒரு மாநிலம் வளர்கிறது என்றால், அந்த மாநிலத்தை உள்ளடக்கிய ஒன்றிய அரசு மகிழ்ச்சி தான் அடைய வேண்டும்.. அதுதான் உண்மையான கூட்டாட்சி தத்துவம்.. மாநிலங்கள் வளர்ந்தால், அது மூலம் நாடு வளரும்.. மாநிலத்தின் வளர்ச்சியால் நாடு தான் பலன் பெறும்.. நாடு தான் பலம் பெறும்.

ஆனால் இன்றைக்கு ஒன்றியத்தை ஆளக்கூடிய அரசு, மாநிலங்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் அரசாக உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்கிற அரசாக இருக்கிறது.ஜிஎஸ்டி மூலமாக நம்ம மாநிலத்தின் வரியை மொத்தமாக கபளீகரம் செய்தார்கள்.. மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை தரமறுக்கிறார்கள்.. மாநிலங்களுக்கு புதிய திட்டத்தை அறிவிக்க மறுக்கிறார்கள்.. ஒன்றிய அரசு மாநில அரசும் இணைந்து நிறைவேற்றவேண்டிய திட்டங்களுக்கான நிதியை கூட தர மறுக்கிறார்கள்.. இது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டும், பொறுத்துக் கொண்டும் நாம் திட்டங்களை தீட்டி வருகிறோம்..
அதையும் தாண்டி வளர்கிறோம்.. வளர்ந்து கொண்டிருக்கிறோம். அதுதான் அவர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. அதை தடுக்க பல்வேறு தடைகளை உருவாக்குகிறார்கள்.. புதிய புதிய சட்டங்களை உருவாக்குகிறார்கள்.. தேசியக் கல்வி கொள்கை என்கிற பெயரில் நம்முடைய பிள்ளைகள் படித்து முன்னேறுவதை தடுக்க பார்க்கிறார்கள்.. பள்ளிக்கூடங்களை மிதிக்கக்கூடாது, வேலைகளை அடையக்கூடாது என்று 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்மாட்கள் ஒதுக்கப்பட்டார்கள்.. வகுப்புவாரிய உரிமை என்று சமூக நீதியை உருவாக்கி பட்டியலின மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கல்விச்சாலையை திறந்து வைத்தோம்.
இன்றைக்கு இவ்வளவுபேர் வேலைகளை பெறவும், கல்வி வாய்ப்புகளை பெறவும் அதுதான் அடித்தளம் அமைத்தது.. அந்த சமூக நீதியை சிதைக்கத்தான் தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின , பழங்குடி, பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் தடுககப்படும். மீண்டும் கல்விச்சாலைக்குள் வரவிடாமல் தடுக்கிறார்கள்...
கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எனக்கு பதில் கடிதம் அனுப்பினார். நான் கேட்கிறேன்... மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதியைத் தருவோம் என பிளாக்மெயில் செய்வது அரசியல் இல்லையா? கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா? பல மொழிக்கொள்கை கொண்ட இந்திய நாட்டைஒரு மொழி நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா? பல்வேறு மொழிப்பேசும் இன மக்கள் வாழும் நாட்டை, ஒற்றை இன நாடாக மாற்ற நினைப்து அரசியல் இல்லையா? ஒரு திட்டத்துக்கான நிதியை கொடுக்க இன்னொரு திட்டத்தை ஏற்கச் சொல்வது அரசியல் இல்லையா? " இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications