வெளியே கேட்டை பூட்டி கோலமாவு டப்பாவில் போட்ட வீட்டுச் சாவி! கடலூர் மூவர் கொலையில் பணிப்பெண் பரபரப்பு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஐடி ஊழியர், தனது தாய், மகனுடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பணிப்பெண் அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தை சேர்ந்தவர் ஐடி ஊழியர் சுதன்குமார் (40). இவர் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவர் 15 நாட்கள் ஹைதராபாத்திலும் மீதி 15 நாட்கள் வீட்டிலும் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி நிஷாந்த் என்ற 10 வயதில் மகன் இருந்தார். இந்த நிலையில் சுதன்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது 10 வயது மகன் நிஷாந்த், சுதன்குமாருடன் வசித்து வந்தார்.
சுதன்குமார் ஹைதராபாத் செல்லும் நேரத்தில் மகனை தனது தாய், தந்தையுடன் தங்க வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுதன்குமாரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து சுதன்குமார், தனது தாய் கமலேஸ்வரியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர்களது வீடு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து சடலங்கள் எரியும் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்த வீட்டை போலீஸார் உடைத்து பார்த்தபோது கமலேஸ்வரி, வீட்டின் வரவேற்பறையில் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார். அது போல் அங்கிருந்த இரு வேறு அறைகளில் சுதன் குமாரும் நிஷாந்தும் வெட்டி கொல்லப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்தனர்.
வீட்டில் நகைப் பணம் ஏதும் கொள்ளை அடிக்கப்படவில்லை. கமலேஸ்வரியின் உடலில் இருந்த நகைகளும் அப்படியேதான் இருந்தன. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த 3 பேரையும் மர்மகும்பல் வெள்ளிக்கிழமை அன்றே வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் வந்த அவர்களின் உடல் மீது துணிகளை போட்டு தீவைத்திருக்கலாம் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர். வீட்டில் இருந்த 3 செல்போன்களையும் கைப்பற்றி ஆராய்ந்த போது அவற்றை யாரோ மர்மநபர்கள் பார்மாட் செய்து அதில் இருந்த தகவல்களை அழித்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு போலீஸார் தகவல் கொடுத்து அந்த எண்களுக்கு யார் போன் செய்தனர், எவ்வளவு நேரம் பேசினர் போன்ற விவரங்களை எல்லாம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுதன்குமாரின் முதல் மனைவி டெல்லி, இவர் திருமணமான 6 மாதங்களில் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து அஞ்சும் சுல்தான் என்ற பெண்ணை காதலித்து சுதன்குமார் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் நிஷாந்த். இந்த நிலையில் அஞ்சும் சுல்தானும் சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் குறித்த தகவல்களையும் போலீஸார் விசாரிக்கிறார்கள். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மர்ம கார் ஒன்று அந்த பகுதிக்கு வந்து சென்றது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இதை வைத்து போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
வீடுகளில் ரத்தக் கறை படிந்துள்ளது. ஆயினும் வீடுகளில் ஒரு இடத்தில் கூட குற்றவாளிகளின் கை ரேகைகள் கிடைக்கவில்லை. எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸார் திணறி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் கூறுகையில், 11 ஆம் தேதி நான் வேலையை முடித்துவிட்டு அவர்களிடம் போய்ட்டு வருவதாக கூறினேன். அப்போது அவர்கள் "ஊருக்கு செல்வதாக" என்னிடம் தெரிவித்தனர். அப்போது கதவை பூட்டி சாவியை எடுத்து கோல மாவு டப்பாவில் வெளியே போட்டுவிட்டு செல்லுமாறு தெரிவித்தார்கள். நானும் அப்படியே செய்தேன்.
நானும் போய்விட்டு அடுத்த நாள் வந்து பார்த்தேன். அப்போதும் கதவு லாக்காகி இருந்தது. கோலமும் போடவில்லை என்பதால் அவர்கள் இன்னும் ஊரில் இருந்து வரவில்லையோ என நினைத்து நான் வீட்டுக்கு சென்றுவிட்டேன். அங்கு போயும் அவர்களுடைய செல்போனுக்கு இரு முறை போன் செய்தேன். யாரும் எடுக்கவில்லை என்றார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில் சுதன்குமார் வீட்டில் 13, 14 ஆகிய தேதிகளின் பேப்பர்கள் படிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. எனவே அவர்கள் 12 ஆம் தேதி நள்ளிரவு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications