மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை
டாக்டர் சேஷாத்திரியின் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கடலூர்: மனித நேய மருத்துவர் என கடலூர் மாவட்ட மக்களால் போற்றப்பட்ட பிரபல மருத்துவர் சேஷாத்திரி இன்று காலமானார்.
பரங்கிப்பேட்டை நெல்லுக்கடை பகுதியில் வசித்து வந்தவர் சேஷாத்திரி. இந்த பரங்கிப் பேட்டை என்பது ஒரு நீண்டகாலமாகவே பின்தங்கியுள்ள இடமாகும். அதனால் இந்த ஊரில் சொல்லக்கூடிய அளவுக்கு ஆஸ்பத்திரிகளோ, டாக்டர்களோ கிடையாது.
70 வருட சேவை
எனவே இங்குதான் தனது சேவையை தொடங்க வேண்டும் என்று சேஷாத்திரி விரும்பினார். அதன்படியே மருத்துவம் பார்க்க தொடங்கினார். சுமார் 70 ஆண்டுகாலமாக மருத்துவ சேவையாற்றி வந்த இவர், கடைசிவரை அந்த பகுதி மக்களைவிட்டு வேறு எங்குமே செல்லவில்லை.
குழந்தைகள் நலன்
மேலும் சேஷாத்ரி என்றாலே இந்த மாவட்டம் முழுவதும் ரொம்ப பிரபலம். அதற்கு காரணம் இவரிடம் ஃபீஸ் ரொம்ப குறைவு. ஏழை உள்ளிட்ட எல்லோரிடமுமே அதிக அளவு கட்டணத்தை இவர் வாங்கியதே இல்லை. இதனாலேயே மக்களிடையே மிகவும் பரிச்சயம் ஆனார். ஒரு மருத்துவர் என்பதையும் தாண்டி மக்கள் இவர் மீது அன்பை பொழிந்தார்கள். பொது மருத்துவம் மட்டுமில்லாமல் குழந்தைகள் நலனிலும் அக்கறை செலுத்தியவர் சேஷாத்திரி.
வாழ்நாள் சாதனையாளர்
முதுமையின் காரணமாக மருத்துவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இவரது மருத்துவ சேவையை பாராட்டி கடந்த 2009-ம் ஆண்டு பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத், வாழ்நாள் சாதனையாளர் விருதினை அப்போதைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மூலம் வழங்கி கவுரவித்தது.
திரண்ட ஊர்மக்கள்
இந்நிலையில் இன்று காலை சேஷாத்திரி மரணமடைந்தார். இவரது மறைவு செய்தியை கேட்டு அந்த ஊர் மக்களே திரண்டு வந்து அஞ்சலி செலுத்த தொடங்கினார்கள். அப்பகுதி இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் இதில் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன், சேஷாத்திரியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி சென்றார்கள்.
பொதுமக்கள் கண்ணீர்
இப்படிப்பட்ட மனிதநேய மக்கள் மருத்துவர் சேஷாத்திரி மறைவால் பரங்கிப்பேட்டை பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இஸ்லாமிய ஆண்கள் - பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமாக திரண்டு பார்வையிட்டு அவரின் மகனும் மருத்துவருமான, பார்த்தசாரதி, ரங்கராஜன், சீனிவாசன் உள்ளிட்டோருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். "இனி இப்படி ஒரு டாக்டர் நமக்கு எப்போது கிடைப்பார்" என ஊர்மக்கள் கண்ணீரை உதிர்த்தவாறே சொல்கின்றனர்!!