'உச்சக்கட்ட அலட்சியம்..' ஒரே பெண்ணுக்கு அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட்ட செவிலியர்
கடலூர்: கடலூரில் அருகிலிருந்த ஒருவருடன் பேசிக் கொண்டே செவிலியர் ஒருவர் ஒரே பெண்ணுக்கு இரண்டு முறை கொரோனா தடுப்பூசி செலுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அதைத் தடுக்க முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கும், பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது இப்போது வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடி ஊயரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வேக்சின் பணிகள்
தற்போதைய சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவை ஒழிக்க ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் வேக்சின் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்ச் ஏப்ரல் மாதங்களில் வேக்சினுக்கு இருந்து பற்றாக்குறை இப்போது முழுமையாக நீங்கிவிட்டது. இதனால் வேக்சின் பணிகள் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

கடலூரில் பரபரப்பு
இந்தச் சூழலில் கடலூர் பெண்ணாடம் பகுதியில் ஒரே பெண்ணுக்கு சில நிமிட இடைவெளியில் இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி லட்சுமி. கட்டிடத் தொழிலாளியான லட்சுமி, இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பெண்ணாடத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

இரண்டு முறை தடுப்பூசி
முதலில் அங்கிருந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற அவர், பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செவிலியரிடம் சென்றுள்ளார். வழக்கம் போலக் கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார். இருப்பினும், அங்கிருந்த ஒருவருடன் பேசிக்கொண்டே அதே செவிலியர் லட்சுமிக்கு மீண்டும் 2வது முறையாகத் தடுப்பூசி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. தனக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என்று கூறியும் கூட, அதைக் கொஞ்சமும் காதில் காங்கிக் கொள்ளாமல் அலட்சியத்துடன் செயல்பட்ட செவிலியர், இரண்டாவது முறையாகத் தடுப்பூசி போட்டதாக லட்சுமி தெரிவித்தார்.

வேக்சின் தழும்பு
இது குறித்து லட்சுமியின் மகன் ஐயப்பன் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்குச் சென்று மருத்துவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், லட்சுமிக்கு ஒரு முறை மட்டுமே வேக்சின் போட்டதாகத் தெரிவித்தார். இதையே தான் அந்த செவிலியரும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் லட்சுமியோ இரண்டு முறை ஊசி போட்டதால் கையில் ஏற்பட்டுள்ள தழும்பைக் காட்டியுள்ளார்.
Recommended Video

பரபரப்பு
இதையடுத்து 50 வயதாகும் லட்சுமிக்கு தலைமை மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்குச் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வேக்சின் போட வந்த சிலர் அச்சமடைந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலேயே திரும்பினர். ஏற்கனவே குறிப்பிட்ட அளவு மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் இருக்கும் நிலையில், அலட்சியம் காரணமாக நடைபெறும் இதுபோன்ற செயல்கள் மக்களின் தயக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே உள்ளது.

மெகா தடுப்பூசி முகாம்
முன்னதாக நேற்று தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் தடுப்பூசி முகாம்களில் 20 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மக்கள் அதிக ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இலக்கை கடந்து மொத்தம் 28.91 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் 1.88 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது,












Click it and Unblock the Notifications