"நடுரோட்டில் தகராறு செய்தார்" இயக்குநர் சேரன் மீது கடலூர் தனியார் பஸ் டிரைவர் போலீஸில் புகார்
கடலூர்: கடலூரில் தனியார் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக இயக்குநர் சேரன் மீது போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர்- புதுவை இடையே 150க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. மூன்று நிமிட இடைவெளியில் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுவதால் இந்த பேருந்து ஓட்டுநர்கள் ஏர் ஹாரன்களை பயன்படுத்தி அதிக ஒலி எழுப்பிக் கொண்டு அதிவேகமாக மற்ற வாகனங்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாகவே தினசரி பேருந்துகளை இயக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 11.30 மணிக்கு புதுவையிலிருந்து கடலூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்துக்கு முன்னால் நடிகரும் இயக்குநருமான சேரன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் அதிக அளவு சப்தத்துடன் ஒலி எழுப்பிக் கொண்டே வந்தார். இதனால் சேரன் ஆத்திரமடைந்து நடுரோட்டில் தனது காரை நிறுத்தினார்.
உடனே காரை விட்டு இறங்கி அதிக ஒலி எழுப்பிய பேருந்து ஓட்டுநரிடம் சென்று "சாலையில் ஒதுங்குவதற்கு வழி இல்லாத நிலையில் இப்படி அதிகமாக ஹாரனை எழுப்பக் கூடாது" என வாக்குவாதம் செய்தார். பதிலுக்கு அந்த ஓட்டுநரும் வாக்குவாதம் செய்தார்.
தான் தவறு செய்துள்ள நிலையில் ஓட்டுநரும் வாக்குவாதம் செய்ததால் வெறுப்படைந்த சேரன், ஒதுங்குவதற்கும் வழிவிடுவதற்கும் இடமில்லாத இடத்தில் தொடர்ந்து இவ்வாறு சக வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியபடியே அந்த இடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில் கடலூரில் தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குநர் சேரன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளுடன் இயக்குநர் சேரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் இயக்குநர் சேரன் நடுவழியில் தகராறு செய்தது தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications