கடலூர் சிப்காட் ரசாயன ஆலையில் தீ விபத்து... 4 பேர் உயிரிழப்பு... 20 பேருக்கு மூச்சுத்திணறல்..!
கடலூர்: கடலூர் சிப்காட்டில் இயங்கி வரும் ரசாயன ஆலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. ஷிப்ட் அடிப்படையில் ஆலைக்கு தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர்.

அந்த வகையில் இன்று காலை 6 மணி ஷிப்ட் தொடங்கிய சிறிது நேரத்தில், ஆலையின் இரண்டாவது தளத்தில் இருந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்கிறது.
அதில் நிகழ்விடத்திலேயே 2 பேர் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் ஆலையை சூழ்ந்த புகையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

இதனிடையே பாய்லர் வெடித்ததால் சிப்காட் பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறி மயக்கம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து அறிந்தவுடன் நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டனர். இதனால் அங்கு ஏற்பட இருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, சிப்காட், என அடிக்கடி பாய்லர் வெடிப்பு நிகழ்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய ஆய்வு நடத்தினால் வரும் காலத்தில் உயிரிழப்புகளையும், விபத்துக்களையும் தவிர்க்கலாம்.












Click it and Unblock the Notifications