விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது கொடுக்கணும்.. தேமுதிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்கள்!
கடலூர்: கடலூரில் நடந்து வரும் தேமுதிக 2.0 மாநாட்டில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் விஜயகாந்திற்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், 2026 சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடலூர் மாநாட்டில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறி இருந்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் தேமுதிகவின் மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி தேமுதிக தரப்பில், 2026 சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. அதேபோல், இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
அதேபோல் விஜயகாந்திற்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். கரும்புக்கு உரிய நியாயமான விலையை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும். விஜயகாந்திற்கு தனியாக பொது இடத்தில் மணி மண்டபம் அமைக்க வேண்டும். அதேபோல் தமிழகத்தில் தற்போது சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், சட்டம், ஒழுங்கை சீரமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications