85,000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி... வீடு வீடாக விநியோகம் செய்யும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கடலூர்: கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது குறிஞ்சிப்பாடி தொகுதியில் வீடு தவறாமல் தலா 5 கிலோ அரிசி பையை விநியோகித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சுமார் 50 நாட்களை நெருங்கி விட்டது. இதனால் ஏழை எளியோர், நடுத்தர வர்க்கத்தினர் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் நிவாரணப் பணிகளை முதலில் கையில் எடுத்தது திமுக தான். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக வீதியில் இறங்கி திமுகவினர் நிவாரணப் பொருட்கள் வழங்கத் தொடங்கினர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஏற்கனவே 8 ஆயிரம் பேருக்கு காய்கறிகள், மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை முதற்கட்டமாக மாவட்டம் முழுவதும் விநியோகித்தார். இப்போது இரண்டாம் கட்டமாக தன்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்காக வீடு தவறாமல் குடும்பம் ஒன்றுக்கு தலா 5 கிலோ அரிசி பையை வழங்கி வருகிறார்.

மொத்தம் 85,000 குடும்பங்களுக்கு அரிசி பை சென்று சேரும் வகையில் அதனை எடை போட்டு பிரிக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக திருமண மண்டபம் ஒன்றில் நடந்து வருகிறது. இதனை அடுத்த 10 நாட்களுக்குள் டோர் பை டோர் விநியோகம் செய்ய ஆட்களை பணியமர்த்தி அதற்கான வேலைகளை கவனித்து வருகிறார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

மேலும், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கும் மட்டுமல்லாமல் மாவட்டச் செயலாளர் என்கிற முறையில் அனைத்து பகுதி மக்களுக்கும் ஒன்றிணைவோம் வா செயல்திட்டம் மூலம் உதவிகள் புரிந்து வருகிறார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.














Click it and Unblock the Notifications