15 வயது பள்ளி மாணவியை.. கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சக மாணவர்கள்! வெலவெலத்துபோன கடலூர்
சென்னை: கடலூரில் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் பெண்கள் மீதான பாலியல் ரீதியான அத்துமீறல் சம்பவங்கள் மிக மோசமாகவே உள்ளது.
அதிலும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப ஆண்டுகளில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 15 வயது பள்ளி மாணவி கூட்டு பலத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இருபாலரும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளி பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவி கடந்த மே 22ஆம் தேதி அன்று அதே பள்ளியில் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த மாணவனின் பிறந்தநாள் விழாவுக்கு மாணவி சென்றுள்ளார்.

மிரட்டிய மாணவர்
அப்போது பிறந்தநாள் நிகழ்ச்சியில் வேறு சில மாணவர்களும் கலந்து கொண்டனர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் அந்த மாணவனுடன் மாணவி புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பிறந்தநாள் கொண்டாடிய மாணவன் தன் சக நண்பர்களிடம் பகிர்ந்துள்ளான். இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி பள்ளி மதிய உணவு இடைவெளியின் போது அந்த மாணவியை சக மாணவன் ஒருவன், "உன்னுடைய புகைப்படம் என்னிடம் உள்ளது. என்னுடன் வா" என்று மிரட்டி அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கூட்டு பலாத்காரம்
அப்போது வீட்டிற்கு உள்ளே மாணவி சென்றவுடன் அந்த மாணவன் வீட்டின் கதவைத் தாழ்ப்பாள் போட்டுள்ளான். அப்போது அந்த வீட்டின் உள்ளே மேலும் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் இருவர் இருப்பதைப் பார்த்து அந்த மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார். மூன்று பேரும் சேர்ந்து அந்த மாணவியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.

வீடியோ
அவர்களே அந்த வீடியோவை 17 நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் மாணவி பள்ளிக்குச் செல்லவில்லை என்று தாயிடம் கூறியுள்ளார். அதற்கு அவருடைய தாய் காரணம் கேட்டதற்கு நடந்த சம்பவத்தைத் தாயிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரது தாய் ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போக்சோவில் கைது
அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் நேரில் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து மாணவியை பலாத்காரம் செய்த மூன்று பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். புகைப்படத்தை அனுப்பிய முன்னாள் மாணவனையும் போக்சோ வழக்கில் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியும் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இப்பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications