காதலிக்க மறுத்த திலகவதி - கத்தியால் குத்தி கொலை செய்த ஆகாஷ் ... காரணம் ஒரு தலைக் காதல்
கடலூர்: சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி ரயில் நிலையத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. விழுப்புரம் நவீனா, கரூர் சோனாலி என கடந்த 2016ஆம் ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஒருதலைக்காதலால் கொலை செய்யப்பட்டனர்.
அதே போன்ற கொலை சம்பவங்கள் இப்போது கடலூர் மாவட்டத்தில் அரங்கேறி வருகின்றன. பட்டதாரியாக வேண்டும் என்ற கனவுகளுடன் கல்லூரிக்கு சென்று வந்த மாணவி திலகவதியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான் ஆகாஷ் என்ற கொடியவன்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே ஒருதலைக்காதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காதல் தற்கொலைகளும் அதிகம் நடந்து வருகின்றன. கடந்த 6 மாதத்திற்க்கு முன்பு குறிஞ்சிப்பாடி அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை ரம்யா கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பாதிப்பு மறையும் முன்பாக விருத்தாச்சலம் அருகே கல்லூரி மாணவி திலகவதி குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பட்டதாரி கனவு
பவழங்குடி கிராமத்தில் வசிக்கும் சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் திலகவதி. பெயருக்கு ஏற்றார்போல அமைதியான சுபாவம் கொண்டவர். படிப்பில் ஆர்வம் கொண்ட திலகவதிக்கு பட்டதாரியாக வேண்டும் என்ற கனவு அதிகம் உண்டு. டிகிரி முடித்து விட்டு அரசு தேர்வு எழுதி அரசாங்கத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையும் உண்டு.

கொடியவன் ஆகாஷ்
திலகவதியின் கனவில் நெருப்பை பற்ற வைக்க வந்தவன்தான் ஆகாஷ். கருவேப்பிலங்குறிச்சி அருகிலுள்ள பேரளையூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த கொடூரன், காதல் என்ற பெயரில் வலை வீச அதற்கு திலகவதி மறுத்துள்ளார். பெற்றோர்களும் திட்டி விரட்டிவிட்டுள்ளனர். தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற கொடூர எண்ணம் ஆகாஷ் மனதில் ஆழமாக பதியவே நேரம் பார்த்து காத்திருந்தான்.

வீட்டில் சண்டை
நேற்று மாலையில் திலகவதியின் வீட்டுக்கு சென்ற ஆகாஷ் சண்டை போட்டிருக்கிறான். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட ஆகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி கொன்று விட்டு தப்பிவிட்டான். ரத்த வெள்ளத்தில் துடித்த திலகவதி தாய் மாமன் மகேந்திரனுக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். பதறியடித்துக்கொண்டு வந்த மாமன், திலகவதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே, அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. திலகவதியின் பட்டதாரி கனவுகள் அனைத்தும் ஒருதலைக்காதலில் கருகிப்போனது.

கொடூரம்
ஒருதலைக்காதலுக்கு பலியான பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆசிட் வீச்சுக்கு பலியான விநோதினி தொடங்கி விருத்தாச்சலம் திலகவதி வரை காதலிக்க மறுத்தால் கொலை செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்த கொலையாளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஒருதலைக்காதல் கொலை குற்றங்கள் குறையும்.












Click it and Unblock the Notifications