குழந்தை பிறந்த நேரத்தில் இடிந்த கூரை!.. கடலூரில் பரபரப்பு சம்பவம்.. தாய், சேய்க்கு என்ன ஆனது?
கடலூர்: கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் பிரசவத்தின் போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர்.

கர்ப்பிணி அனுமதி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி ரேவதிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதாலும் நகர்ப்புறத்திற்கு சென்று பிரசவம் பார்க்க இயலாது என்பதாலும் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேவதி அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு ரேவதிக்கு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பிரசவம் பார்க்கத் தொடங்கினர். பின்னர் ரேவதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியை ரேவதி மற்றும் முருகன் ஆகியோர் கொண்டாடுவதற்கு முன்னரே தலையில் இடி விழுந்தது போல் ஒரு சம்பவம் நடைபெற்றது.

பிரசவத்திற்கு பின்னர் இடிந்த கூரை
அதாவது குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கூரை இடிந்து பிரசவ வார்டில் விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். இந்த இடிபாடுகளில் சிக்கி ரேவதியின் உறவினர் இயல் ராணி, மருத்துவமனை உதவியாளர் செல்வி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மேலும் ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

தாய், சேய்க்கு பாதிப்பில்லை
அதிர்ஷ்டவசமாக குழந்தை பெற்றெடுத்த ரேவதிக்கும், அவரது ஆண் குழந்தையும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி உயிர் தப்பியுள்ளனர். இதை அடுத்து கிராம மக்கள் அங்கு கூடினர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் நல்லூர் கிராமத்தில் உள்ள வட்டார சுகாதார நிலையம் 50 ஆண்டுகளாக பழமையானது என்றும் இதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

மக்கள் குமுறல்
மேலும் விபத்து, நோய் பாதிப்பு போன்ற பேரிடர் காலங்களில் மருத்துவமனைக்கு சென்றால் குணமடைந்து விடலாம் என்று வரும் நேரத்தில் மருத்துவமனையிலேயே இதுபோன்ற அசம்பாவிதம் நடந்தால் எங்குதான் செல்வது என நோயாளிகள் சிலர் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications