ஓசி பயணம்.. 10 கிமீ தூரத்துக்கு கத்தி கத்தியே உயிரை விட்ட கண்டக்டர்.. விளக்கம் கேட்கிறது ஆணையம்
கண்டக்டர் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது ஆணையம்
Recommended Video
கடலூர்: அரசு பஸ்ஸில் டிக்கெட் எடுக்க சொன்ன கண்டக்டர், போலீஸ்காரரிடம் வாக்குவாதம் செய்தே மயங்கி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில், மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருச்சியிலிருந்து கடலூருக்கு சென்ற அரசு பஸ்ஸில் போலீஸ்காரர் பழனிவேல் மஃப்டியில் ஏறியுள்ளார். அவர் போலீஸ் என்று தெரியாமல் கண்டக்டர் கோபிநாத் டிக்கெட் எடுக்க சொல்லவும், தான் ஒரு போலீஸ்காரர் என்று சொல்லி உள்ளார். அதற்கு கண்டக்டர், ஐடி கார்டு காட்டுமாறு கேட்கவும், அதற்கு மறுப்பு சொல்லி தகராறு செய்துள்ளார்.
கண்டிப்பு நிறைந்த கண்டக்டரும் தொடர்ந்து 10 கி.மீ. தூரத்துக்கு கத்தி கத்தி சண்டை போட்டு கொண்டே வந்தார். பஸ்ஸில் இருந்த பயணிகள் எல்லாம் கண்டக்டருக்கு ஆதரவு தெரிவித்தனர் என்றாலும், யாருமே சண்டையை விலக்கி விட தெரியவில்லை போலும். இறுதியில் மயங்கி விழுந்து பஸ்ஸிலேயே கண்டக்டர் இறந்துவிட்டார்.

சிறைபிடித்தனர்
விசாரணையில்தான் தெரிந்தது, திட்டக்குடி போலீஸ்காரரான பழனிவேல், ஐடி கார்டை கையில் வைத்திருக்கவில்லை என்பது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரை சிறைபிடித்து மந்தாரக்குப்பம் போலீசிலும் ஒப்படைத்தனர்.

கைது
இதற்கிடையே டிக்கெட் எடுக்காமல் கண்டக்டரிடம் வாக்குவாத்ததில் ஈடுபட்ட போலீஸ்காரர் பழனிவேலை கைது செய்ய கோரி கடலூரில் சிஐடியூ சங்கத்தை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து கருப்பு கொடியுடன் போராட்டம் செய்தனர். கோபிநாத் குடும்பத்துக்கு உதவித்தொகையும் கோரினர்.

நோட்டீஸ்
இறந்துபோன கோபிநாத் பணிஓய்வு பெற இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், இப்படி ஆகிவிட்டதே என்பதுதான் சக தொழிலாளர்களின் மன வேதனை. இந்நிலையில், இந்த விவகாரத்தில், மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தாமாக முன்வந்து இந்த வழக்கு விசாரணையை ஆணையம் கையில் எடுத்துள்ளது.

விளக்கம்
கடலூர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர், விழுப்புரம் மண்டல போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனருக்கும் இது சம்பந்தமான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கண்டக்டர் பழனிவேல் உயிரிழந்தது தொடர்பாக, 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications