இப்படி ஒரு ஆளுநரை எங்கேயுமே பார்த்ததில்லை.. தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பிடி பிடித்த கார்கே!
கடலூர்: இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனது அரசியல் பயணத்தில் இப்படி ஒரு ஆளுநரை பார்த்ததில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முனைவர் தொல். திருமாவளவன், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

மல்லிகார்ஜுன கார்கே பேச்சு: இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மத்திய பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு மோடி எதையுமே செய்ய மாட்டார். தமிழ்நாட்டின் உரிமைகளை நாம் போராடித்தான் பெற வேண்டும். மாநிலங்களுக்கான நிதி பகிர்வை பாஜக அரசு பாரபட்சமாக ஒதுக்குகிறது.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களுக்காக போராடுபவர் திருமாவளவன். ஜனநாயகம், அரசமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட்ட இன்றைய சூழலில் திருமாவளவன் தேவைப்படுகிறார். ஜனநாயகத்தையும், அரசமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க கடலூர் தொகுதியில் கை சின்னத்திற்கும், சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்திற்கும் வாக்களிக்க வேண்டும்.
இப்படி ஒரு ஆளுநரை பார்த்ததில்லை: நான் தொடர்ந்து 53 வருடங்களாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன். ஆனால் இதுவரையில் இதுபோன்ற நியமனம் செய்யப்பட்ட ஒரு ஆளுநரை நான் பார்த்ததில்லை. தமிழ்நாடு அரசின் பட்ஜெட், துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் அனைத்திலும் இடையூறு செய்கிறார் ஆளுநர்.

தமிழ்நாடு ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் முதல்வரையும் மதிக்காமல் தன்னை ஒரு ராஜாவாக கருதிக் கொண்டு செயல்படுகிறார். இத்தகைய செயல்பாடுகள் மாற வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
மோடியை போன்ற ஒரு பொய்யர்: போதிய நிதியை ஒதுக்க வேண்டி மத்திய பாஜக அரசிடம் தமிழ்நாடு அரசு போராடி வருகிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் விருப்பப்படி விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும்.
இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன், ஒவ்வொருவருக்கும் 15 லட்ச ரூபாய் தருவேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். செய்தாரா? மோடியைப் போன்ற ஒரு மிகப்பெரிய பொய்யரை நான் பார்த்ததில்லை." எனப் பேசினார்.
இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வீ.கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் அசோக் கோகாய், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications