பாமகவில் முக்கிய விக்கெட்கள் அவுட்! வேல்முருகன் கட்சிக்கு தாவிய நிர்வாகிகள்! கலகலக்கும் கடலூர்!
கடலூர்: கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
மது விலக்கு எதிர்ப்பு, என்.எல்.சி. எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பாமகவுக்கு ஆதரவாக வேல்முருகன் குரல் கொடுத்து வந்த நிலையில் இந்த ட்விஸ்ட் நடந்துள்ளது. அன்புமணி கைது செய்யப்பட்ட போது கூட முதல் ஆளாக கண்டன அறிக்கை வெளியிட்டவர் வேல்முருகன் தான்.

இப்போது என்னவென்றால் மீண்டும் பாமக எதிர்ப்பு அரசியலை தீவிரமாக கையில் எடுத்திருக்கிறார். தான் கட்சி ஆரம்பித்த போது 3 மாசம் கூட வேல்முருகனால் கட்சி நடத்த முடியாது என்று பாமகவினர் கேலி செய்ததாகவும் இப்போது 12 ஆண்டுகளை கடந்தும் கட்சி நடத்தி வருவதாகவும் வேல்முருகன் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
வன்னியர் சமுதாயத்திலிருந்து கட்சி ஆரம்பித்த யாரையும் ராமதாஸ் கட்சி நடத்தவிட்டதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள வேல்முருகன், ஜெகத்ரட்சகன், வாழப்பாடி ராமமூர்த்தி என பலரையும் அதற்கு உதாரணம் கூறியுள்ளார்.

இந்தச் சூழலில் தான் கடலூர் மாநகர பாமக செயலாளர் வீர.பால்ராஜ் மற்றும் பாமக முக்கிய நிர்வாகிகளான ஐயப்பன், சம்பத், ஜெயமூர்த்தி, சேரன், சத்தியமூர்த்தி, உதயகண்ணன், ஜெகதீஷ், பாலு உள்ளிட்டோர் மற்றும் 100 பாமகவினர் வேல்முருகன் தலைமையை ஏற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்துள்ளனர்.
பாமக மேலிடத்தின் மீது கொண்ட அதிருப்தி காரணமாகவே இந்தக் கட்சித் தாவல் படலம் அரங்கேறியுள்ளது. பாமகவிலிருந்து விலகி தமிழக வாழ்விரிமைக் கட்சியில் இணைந்தவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications