3 மாத குழந்தை இறப்புக்கு தடுப்பூசி காரணமா? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்! நீடிக்கும் குழப்பம்!
கடலூர்: 3 மாத குழந்தையின் இறப்புக்கு அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி காரணமில்லை என சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஏ.கே.பாளையத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணராஜ் -காந்தி பிரியா தம்பதி. இவர்களுக்கு தஸ்விக் ராஜ் என்ற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு கலையூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் 3 மாத தடுப்பூசி செலுத்தப்பட்ட அன்று இரவே குழந்தைக்கு வயிறு உப்பியிருக்கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி வந்த நிலையில், பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தங்கள் குழந்தையின் மரணத்துக்கு தடுப்பூசி தான் காரணம் எனக் கூறி பெற்றோர் கதறி துடித்துள்ளனர்.
அதற்குள் இந்த விவகாரம் அமைச்சர் மா.சுப்ரமணியன் கவனத்துக்கும் சென்றிருக்கிறது. இதையடுத்து சுகாதாரத்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், குழந்தைக்கு வயிற்று வலி ஏற்பட்டு அழுததால், வீட்டில் இயற்கை மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் ஒவ்வாமையால் வயிறு உப்பி உயிரிழந்திருக்கலாம் என்றும் குழந்தையின் உயிரிழப்புக்கு தடுப்பூசி காரணமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஸ்விக் ராஜை போல் மேலும் 6 குழந்தைகளுக்கு கலையூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அந்தக் குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் குழந்தை உயிரிழப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்றும் தடுப்பூசி போட்ட பிறகு அரை மணி நேரம் கண்காணிப்பு பிறகே குழந்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இந்த விவகாரத்தில் இன்னும் குழப்பமும் சர்ச்சையும் நீடிப்பதால் காவல்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த துயர நிகழ்வு கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications