அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகனுக்கு தேடி வந்த முக்கியப் பதவி! களைகட்டும் கடலூர் மாவட்ட திமுக
கடலூர்: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை திமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டும் இருந்து வந்த கதிரவன் எடுத்த எடுப்பிலேயே நேரடியாக மாவட்ட பொருளாளர் ஆக்கப்பட்டுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கடலூர் கிழக்கு மாவட்ட திமுகவில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வரவு செலவு கணக்கு பார்த்தவர் கதிரவன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓசி டிக்கெட் வேணாம்! ஈரோட்டிலும் கொந்தளித்த பெண்கள்! ப்ளான் பண்ணி பன்றாங்களோ? புகார் சொல்லும் திமுக!
அமைச்சர் மகன்
வேளாண்மைத் துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தை கவனித்து வந்த நிலையில், இப்போது நேரடி அரசியலில் இறங்கியிருக்கிறார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். திமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டும் இருந்து வந்த கதிரவன் இப்போது கடலூர் கிழக்கு மாவட்ட திமுகவின் பொருளாளராக உயர்ந்துள்ளார்.
கணக்கு வழக்கு
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தேர்தல் செலவு உட்பட கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கடலூர் கிழக்கு மாவட்ட திமுகவில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வரவு செலவு கணக்கு பார்த்தவர் கதிரவன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே தனது மகன் கதிரை பொருளாளராக ஆக்கி தனது பக்கத்தில் வைத்துக் கொண்டார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். கதிரவனை இளம் வேங்கை என அவரது ஆதரவாளர்கள் அடைமொழியிட்டு அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
நிதானம் -பொறுமை
தனது தந்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை போல் இல்லாமல் நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிக்கக் கூடியவர் கதிரவன் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முன் கோபம் இல்லாமல் அணுசரனையாக கட்சிக்காரர்களிடம் இவர் நடந்துக்கொள்வதால் இவரது பொருளாளர் பதவிக்கு பெரியளவில் போட்டி இல்லாமல் இருந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் தான் கடலூர் திமுக வேட்பாளர் என இப்போதே அமைச்சரின் ஆதரவாளர்கள் ஆருடம் கூறுகிறார்கள்.
அமைச்சர்கள் வாரிசு
இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி மற்றும் மனோ தங்கராஜ் மகன்களுக்கு திமுக செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அமைச்சர் கீதா ஜீவனின் தம்பி ஜெகன் பெரியசாமிக்கும் தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சீனியர் அமைச்சர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் தங்கள் வாரிசுகளுக்கு எந்தப் பதவியையும் பெற்றுக்கொடுக்கவில்லை.