"படிக்கட்டு இன்றி இயக்கப்பட்ட அரசு பஸ்.. அதிமுக காலத்தில் பஸ்கள் வாங்காததே காரணம்!" சிவசங்கர் பேச்சு
கடலூர்: அரசு பேருந்து ஒன்று படிக்கட்டு இல்லாமல் இயக்கப்பட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பேருந்தில் பின்னால் படிக்கட்டுகள் இல்லாமல் இயக்கப்படுவது போன்ற வீடியோ வெளியாகி இணையத்தில் டிரெண்டானது. இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து அரசை விமர்சித்தனர்.

பேருந்துகள் இதுபோல பாதுகாப்பு இல்லாத நிலையில் இயக்கப்பட்டால் இதனால் பொதுமக்கள் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும் என்றும் பலரும் விமர்சித்தனர். இதுபோன்ற பேருந்துகளை இயக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.
அமைச்சர் சிவசங்கர் விளக்கம்: இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். படிக்கட்டு இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்ட சம்பவம் எங்கே எப்படி நடந்தது என்பதை விளக்கிய அவர், அதிமுக ஆட்சியில் தேவைக்கேற்ப பேருந்துகளை வாங்காமல் விட்டதே இதற்குக் காரணம் என்றும் விமர்சித்தார்.
இது தொடர்பாகக் கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு இடத்தில் மட்டுமே நீங்கள் சொன்னது போன்ற சம்பவம் நடந்தது. பள்ளி, கல்லூரிகள் உள்ள அந்த வழித்தடத்தில் மாணவர்கள் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்கிறார்கள். இதற்காக அங்கே டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த டவுன் பஸில் கோளாறு ஏற்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக நகரங்களுக்கு இடையே இயக்கும் mofussil பேருந்துகளை இயக்கியுள்ளனர்.
என்ன நடந்தது: வேகத்தடையில் ஏறி இறங்கும் போது mofussil பேருந்தின் அந்த படிக்கட்டுகள் உடைந்துவிட்டன. இந்தச் சம்பவம் நடந்த 3, 4 கிமீ தொலைவில் பள்ளி, கல்லூரிகள் இருந்தன. இந்தச் சம்பவம் நடந்த இடத்திலேயே மாணவர்களை இறக்கிவிட்டால் அவர்களுக்குச் சிரமம் என்பதற்காக பஸ்ஸில் இருந்த பயணிகளுடன் சென்று அந்த பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே அவர்களை இறக்கிவிட்டுள்ளனர்.
அந்த 3, 4 கிமீ செல்வதற்குள் அதை யாரோ சிலர் வீடியோ எடுத்துப் போட்டுவிட்டார்கள். ஏதோ தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பேருந்துகளின் நிலையும் இதேபோல இருப்பது போல அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி காலத்தில் தேவையான பேருந்துகள் வாங்காமல் விட்டதே இந்தப் பிரச்சினைக்குக் காரணம்.
புதிய பேருந்துகள்: இப்போது 4000 பேருந்துகள் வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 100 பேருந்துகளை வாங்கினோம். அடுத்தகட்டமாக 300 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன. பேருந்துகள் கிடைக்கக் கிடைக்கப் பழைய பேருந்துகளை மாற்றிவிட்டு புது பேருந்துகளை இயக்குவோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications