ஜெய்பீம் படத்தை வைத்து 15 நாட்களாக நீட் உள்ளிட்ட பிரச்சினைகளை மறந்தாச்சே.. சீமான்
கடலூர்: ஜெய்பீம் படத்தை வைத்து 15 நாட்களாக நீட், இடிந்தகரையில் அணுக்கழிவுகளை புதைப்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை நாம் மறந்துவிட்டோமே என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி மறைந்த கடல்தீபன் படத் திறப்பு விழாவில் சீமான் பேசியதாவது: என்னிடம் இன்றும் கேட்கிறார்கள்.. உனக்கு என்ன வருமானம் வருகிறது எப்படி சாப்பிடுகிறாய் என? ஒவ்வொருவரிடம் பணம் பெற்றுக் கொண்டுதான் செலவு செய்கிறேன்.
Exclusive; இன்னும் 5 நாட்கள்தான் இருக்கு.. புதிர் போட்டு பேசிய தமிழ்நாடு வெதர்மேன்.. என்ன நடக்கும்?
ஆனால் வெலல்மண்டி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமியிடம் எப்படி இவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார் என கேட்டிருக்க வேண்டும். ஜெயலலிதா மார்க்கெட் இல்லாத நடிகையாகத்தானே வீட்டில் இருந்தார். கடைசிகாலத்தில் இவ்வளவு பெரிய சொத்து.. 800 ஏக்கரில் எஸ்டேட் வாங்குற அளவுக்கு சொத்து எப்படி வந்ததுன்னு கேட்டிருக்கனுமே...
கருணாநிதி குடும்பம்
திருட்டுத்தனமாக டிரெயின் ஏறி வந்த கருணாநிதியின் குடும்பத்துக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது என கேட்டிருக்கனும்... நீ டிரெயினுக்கு காசு கூட இல்லாமல் வந்த உனக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது? தம்பி உதயநிதி தொடர்ச்சியாக படம் எடுக்கிறார்... ஒரு படமும் ஓடவில்லை.. ஆனால் தொடர்ந்து உதயநிதி படம் எடுக்கிறாரே.. பணம் ஏது?
வீடு இல்லை என்பது வரலாற்று துயரம்
இவ்வளவு பெரிய வீடுகளை கட்டி வாழ்கிறீர்களே... எனக்கு வீடே இல்லை.. உண்மையில் எனக்கு வீடு இல்லை... இந்த மண்ணில் நான் போராடுகிற காலத்தில் கருணாநிதி ஆட்சியில் ஒரு ஹோட்டலில் கூட தங்க அறை தர மாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? நாட்டையே அடைய துடிக்கிற எனக்கு வாழ்வதற்கு வீடில்லை என்பது வரலாற்றில் எவ்வளவு பெரிய துயரம் பாருங்க.. ஒருத்தன் சொல்றான் சீமானுக்கு கோடி கோடியாய் பணம் வருது என்று..
ஜெய்பீம் விவகாரம்
எங்கிருந்தோ எனக்கு பணம் வருகிறது என்கிறார்கள்.. எங்கிருந்தோ வருகிறது என்று தெரிகிறது அல்லவா.. அதை எங்கிருந்து வருகிறது என புலனாய்வு செய்யலாமே. ஜெய்பீம் என்ற படத்தை முன்வைத்து 15 நாட்களாக எல்லா பிரச்சனைகளையும் மூடி மறைத்துவிட்டனர். இடிந்தகரையில் அணுக்கழிவை புதைக்கலாம் என மத்திய அரசு சொல்லி இருக்கிறதே... இதை ஏற்கிறார்களா? எதிர்க்கிறீர்களா? பதில் இல்லை.. நீட் தேர்வால் அனிதா மரணித்த போது நீட்டி முழக்கி அழுதவர்கள் ஆட்சி நடைபெறுகிறது. இந்த 6 மாதத்தில் நீட் தேர்வால் 6 பிள்ளைகள் இறந்துவிட்டனர்... ஆட்சிக்கு வந்தால் நீட்டை நீக்குவோம் என்றீர்களே இப்போ என்ன பதில்? என்றால் பதில் இல்லை.
நானா ஜாதிவெறியன்?
வனப்பாதுகாப்பு சட்டம் என்பது காடுகளை தனியார்மயமாக்குவது.. அந்த ஆபத்தை எதிர்த்து நாம் போராடுகிறோம். அதைப்பற்றி பேச்சு கிடையாது. மீனவர்களைப் பாதிக்கும் சட்டம் பற்றி யாரேனும் வாய் திறந்திருக்கிறார்களா? கச்சத்தீவை மீட்டுக் கொடுங்க என்கிறோம்..அதை செய்யவில்லையே.. 50 ஆண்டுகளாக ஆண்டவர்கள் சாதாரண மழைநீரைக் கூட வெளியேற்ற வசதி செய்து தரவில்லையே.. என்னை ஜாதிவெறியன் என்று எழுதுகிறவர்கள் யார் தெரியுமா? அண்ணன் காடுவெட்டி குருவை புதைத்த மண்ணில் விழுந்து கும்பிட்டு மாலையும் வைத்து வாக்கு கேட்டவர்கள்தான் என்னை ஜாதிவெறியன் என்கின்றனர். காடுவெட்டி குருவின் மகன் கனலை அறிவாலயத்துக்கு வரவழைத்து மாலையிட்ட பெருமக்கள் எங்களை ஜாதிவெறியன் என்கிறார்கள்.
கட்டுவோம் நெய்தல் படை
ஜாதி பார்த்து ஓட்டுப் போட்டால் உன் ஓட்டு எங்களுக்கு தீட்டு என்று அறிவித்த ஒரே கட்சி நாம் தமிழர் மட்டும்தானே. ஓசூரில் இருந்த வந்த பெரியவரிடம் கவுடாவா என ஜாதி கேட்டது ஸ்டாலின்தானே? தம்பி டி.ஆர்.பி. ராஜா, பாலுத்தேவர் மகன் என்று சொன்னபோது வேடிக்கை பார்த்தார்களே.. கே.என்.நேருவும் கே.கே.எஸ்.எஸ்.ஆரும் ரெட்டியார் மாநாட்டில் பங்கேற்கவில்லையா? தமிழின ஓர்மையை திட்டமிட்டு சிதைக்கிற திராவிட கூட்டத்துக்கு தமிழ் பிள்ளைகள் அடிமையாகிவிடக் கூடாது. நான் 10 வயதில் இருந்து மேடையில் பேசுகிறவன்.. என்னிடம் வாயை கொடுக்கக் கூடாது. நாம் தமிழர் கட்சி கட்டப் போகும் நெய்தல் படையணியில் கடல் தீபன் பெயரில் சிறப்பு படையணி உருவாக்குவோம். இவ்வாறு சீமான் பேசினார்.