கடலூரில் பரபரத்த என்.ஐ.ஏ ரெய்டு.. பாஜக நிர்வாகி கொலையில் முக்கிய குற்றவாளி சொத்து ஆவணங்கள் பறிமுதல்!
கடலூர்: புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் செந்தில் குமார் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கடலூரில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரும், அவரது ஆதரவாளருமான செந்தில்குமார் மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். செந்தில் குமார் வில்லியனூர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி ஒரு கும்பலால் வெடிகுண்டு வீசி கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். செந்தில் குமார் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான நித்தியானந்தம் என்பவர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நித்தியானந்தம் கடலூர் பெண்ணை நகர் பகுதியில் கடந்த ஓராண்டாக வாடகை வீட்டில் தங்கி இருந்ததாக வந்த தகவலை தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நித்தியானந்தம் தங்கி இருந்ததாகக் கூறப்பட்ட வீட்டில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இன்று மாலை முதல் சோதனை மேற்கொண்டு வந்தனர். அந்த வீட்டில் உள்ளவர்களிடம் நித்தியானந்தம் எப்போது இங்கு வந்தார், இந்த வீட்டில் உள்ளவர்கள் யார் யார் என்பது பற்றி விசாரித்தனர்.
நித்யானந்தம், கொல்லப்பட்ட செந்தில் குமாருக்கு நெருக்கமாக இருந்து வந்தவர். இந்த வீட்டை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நித்தியானந்தம் வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது. அங்கு ஏதேனும் ஆதாரங்கள், முக்கிய ஆவணங்கள், பொருட்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில், குற்றம்சாட்டப்பட்ட நித்தியானந்தம் உள்ளிட்டோரின் சொத்துகள் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சோதனையை முடித்துக்கொண்டு ஆவணங்களுடன் என்.ஐ.ஏ அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications