ஹலோ யாரு செல்போன் ஓனரா? நான் திருடன் பேசுறேன்! 4 போனுக்கு 15 ஆயிரம் கொடுங்க.. பேரம் பேசிய நபர் கைது
பண்ருட்டி: ஹலோ இந்த செல்போனுக்கு சொந்தகாரர்தானே பேசுறது. உங்க செல்போனை நான்தான் எடுத்துகிட்டு வந்துட்டேன். நான் திருடன் பையன்தான் என கூறி போனின் உரிமையாளரிடம் ரூ 15 ஆயிரம் கேட்டு பேரம் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் 44 வயதான விவசாயி ஏழை பெருமாள். இவரும் இவரது மகனும் இரவில் தூங்கும் போது செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து காலையில் எழுந்து பார்த்த போது வீட்டில் சார்ஜ் போட்டிருந்த செல்போன்களை காணவில்லை. இதே போல் அந்த பகுதியை சேர்ந்த பல இடங்களிலும் செல்போன்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து பண்ருட்டி காவல் நிலையத்தில் ஏழை பெருமாள் செல்போன் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான் செல்போனை தொலைத்த விவசாயிக்கு தனது செல்போனில் இருந்தே போன் வந்துள்ளது. அப்போது திருடன் பேசுகையில் ஹலோ நான் திருட்டு பய பேசுறேன். இந்த போனுக்கு சொந்தக்காரங்க நீங்கதானே,
உங்கள் யாருக்கும் எந்த தொந்தரவு இல்லாமல் ஒரே இடத்தில் 4 செல்போனையும் நானே எடுத்துட்டு வந்துட்டேன். நான் திருட்டு பையன்தான். சூழ்நிலையால் திருடனாகிவிட்டேன், என்ன செய்வது. உங்களுக்கு செல்போன் வேண்டும் என்றால் எனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றார்,. அதற்கு செல்போனின் உரிமையாளரோ எவ்வளவு பணம் வேண்டும் என்கிறார்.
அதற்கு அந்த திருடன் என கூறிக் கொள்ளும் நபர் 4 செல்போன் இருக்கு, எவ்வளவு கொடுப்பீங்க என்கிறார். அதற்கு ஓனர் என்கிட்ட 2000, 3000 தானே இருக்கு, எவ்வளவு வேண்டும், இந்த பணம் கொடுத்தால் செல்போனை குடுத்துடுவீங்கதானே என்கிறார்., அதற்கு அந்த நபர் சாரிங்க 15 ஆயிரம் கொடுத்தால் 4 போனையும் தருகிறேன்.
நீங்கள் புதுசா போய் செல்போன் வாங்கினாலும் இந்த ரேட்டுலதானே வாங்கணும். அதுக்கு என் கிட்டயே வாங்கிக் கோங்க என்கிறார். சரி 15 ஆயிரம் கொடுத்தா போன் கொடுப்பீங்கல்ல என ஓனர் கேட்டதற்கு கண்டிப்பா, ஆனால் எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரணும், நல்ல ஹோட்டல் கடையில் வாங்கிட்டு வாங்க என்கிறார்., அதற்கு அந்த ஓனர் நான் இப்போ வெளியே இருக்கேன் தலைவா என்கிறார்.
மேலும் நான் பணத்தை ரெடி செய்துவிட்டு கூப்பிடுகிறேன் போனை எடுங்கள் என்கிறார். அதற்கு கன்பார்மா எடுப்பேன், ஆனால் விடியறுக்குள்ள கூப்பிடணும், விடிஞ்சிடுச்சினா எடுக்க மாட்டேன். அப்பறம் ஆள வச்சி தேடுவது போலீஸிடம் போறதுனு இருக்க கூடாது. போனாலும் எந்த பிரயோஜனமும் இல்லை, உங்கள் நல்லதுக்காக நான் செய்கிறேன் என மிரட்டும் தொனியில் அந்த நபர் செல்போன் உரிமையாளரிடம் பேசியுள்ளார்.
இந்த தகவலை ஏழை பெருமாள் போலீஸாருக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் அறிவுறுத்தலின்படி 15 ஆயிரம் பணத்தை எடுத்துகொண்டு திருடன் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணத்தை வாங்க முயன்ற போது அந்த திருடன் போலீஸிடம் சிக்கினார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் திண்டிவனத்தை சேர்ந்த 37 வயதான அய்யனார் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து செல்போன், பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications