ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஒன்றுபட்ட தமிழ் மக்கள்.. கடலூரில் வேல்முருகன்.. மரக்காணத்தில் வைகோ
கடலூர்: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ராமேஸ்வரம் முதல் மரக்காணம் வரை 596 கி.மீ தொலைவுக்கு பேரழிவுக்கு எதிரான இயக்கம் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தியது.கடலூரில் நடந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்றார். இதேபோல் வைகோ, பொன்முடி உள்பட பல தலைவர்கள் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஒ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 341 எண்ணெய் கிணறுகள் அமைத்து ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த ஆய்வு வெற்றி பெற்றால் எண்ணெய் எடுப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால், விளை நிலங்கள் பாதிக்கும், மீன் வளங்கள் அழியும் என கடலோர மாவட்ட மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேரழிவுக்கு எதிரான இயக்கம் சார்பில் இன்று மாலை விழுப்புரம் மாவட்டம்மரக்காணம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கிலோமீட்டர் தூரத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
கடலூரில் நடைபெற்ற ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான மனித சங்கிலி தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பங்கேற்றார். கடலூரில் 6 கி.மீ நீளத்துக்கு மனித சங்கிலி அமைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நாகையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடந்தது.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சிதம்பரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் ஆயிக்கணக்கில் திரண்டு மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி முதல் மீமிசல் வரை ஹைட்ரோ கார்பனை எதிர்த்து மனித சங்கிலி அமைத்து மக்கள் போராட்டம் நடத்தினர். மன்னார் வளைகுடாவில் எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டத்தை எதிர்த்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலிவுறுத்தியும் ராமேஸ்வரம் மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கடலோர மாவட்டங்களில் 596 கி.மீ தூரத்திற்கு நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றனர். இந்த போராட்டம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications