வன்முறையில் முடிந்த பாமக போராட்டம்.. கடலூரில் நீடிக்கும் பதற்றம்.. அரசு பேருந்துகளை நிறுத்த உத்தரவு?
கடலூர்: பாமகவின் என்.எல்.சி முற்றுகை போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பேருந்து சேவையை நிறுத்த போக்குவரத்து கழக அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
நெய்வேலியில் என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் கலந்து கொண்டனர். என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அன்புமணி ராமதாஸ் பேசினார். அதைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்எல்சி நிறுவனத்திற்குள் நுழைவதற்காக பா.ம.க.வினர் புறப்பட்டனர்.

அப்போது என்.எல்.சி. வாயில் நோக்கி புறப்பட்ட பா.மக.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பாமக தொண்டர்கள் கல்வீசி தாக்கியதில் காவல்துறையினர் சிலரது மண்டை உடைந்தது. பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் என்எல்சி நிறுவனத்தின் நுழைவு வாயில் போர்க்களம் போல காணப்பட்டது.
ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் நெய்வேலியில் பதற்றம் நிலவுகிறது. தற்போது போராட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் நெய்வேலிக்கு சங்கர் ஜிவால் விரைந்துள்ளார். இதனிடையே, கடலூர் மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுவதால் அரசு பேருந்துகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு, அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்பியதை உறுதிப்படுத்திய பிறகு சேவையை நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளும் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications